பஞ்சாங்கக் குறிப்புகள் - பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 9 வரை #VikatanPhotoCards
புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை; குவாரிகளில் கனிமவளத்துறையினர் ட்ரோன் மூலம் ஆய்வு!
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (வயது: 58). இவர், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் கனிமக் கொள்ளைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும், ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக, திருமயம் அருகே உள்ள துலையானூரில், அதன் அருகே உள்ள வலையன்வயலைச் சேர்ந்த ராசு மற்றும் ராமையா ஆகியோர் நடத்தி வரும் கிரஷர் மற்றும் கல்குவாரிக்கு எதிராக தொடர்ந்து புகார் மனு அளித்து வந்தார்.
இந்நிலையில் தான், ஜகபர் அலி கடந்த 17-ம் தேதி மதியம் தொழுகை முடிந்து இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது குவாரி உரிமையாளர்களின் சதி திட்டத்தால் 407 மினி லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக திருமயம் காவல்துறையினர் உயிரிழந்த ஜகபர் அலி மனைவி மரியம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்காக பதிவு செய்து இதில் தொடர்புடைய குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் தினேஷ்குமார், கொலை செய்ய பயன்படுத்திய லாரி உரிமையாளர் முருகானந்தம், அந்த வாகனம் மூலம் விபத்தை ஏற்படுத்தி கொலை செய்வதற்காக அழைத்துவரப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த காசிநாதன் ஆகிய நான்கு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவர்கள் அனைவருக்கும் வருகின்ற பிப்ரவரி 3-ம் தேதி வரை நீதிமன்ற காவல் பெற்று புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும்,இந்த வழக்கில் தலைமறைவாகி உள்ள குவாரி உரிமையாளர்களில் ஒருவரான ராமையாவை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த விவகாரம் தமிழக அளவில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில்தான், சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகளை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவினரான கரூர், நாகப்பட்டினம், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கனிமவளத்துறை உதவி இயக்குநர்கள் இரண்டு பேர் மற்றும் புவியியலாளர் இரண்டு பேர் என இரண்டு குழுவினர் ஜகபர் அலி புகார் தெரிவித்திருந்த குவாரி உரிமையாளர்கள் ராசு மற்றும் ராமையாவுக்கு சொந்தமான துலையானூரில் உள்ள கல்குவாரிகளில் ட்ரோன் உதவியுடன் அளவிடும் பணியை மேற்கொண்டனர்.
மேலும், இதில் புதுக்கோட்டை மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் உள்ளிட்டோரும் இந்த ஆய்வில் இணைந்துள்ளனர். கனிமவளத்துறை அதிகாரிகளின் அளவிடும் பணி தொடர்ந்து மூன்று தினங்கள் நடைபெறும் என்றும் அளவிடும் பணியை முடித்து தமிழ்நாடு அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாகவும் கனிமவளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.