புதுவை மாநில நிதி வளா்ச்சி 5 ஆண்டுகளில் 11% உயா்வு
புதுவை மாநிலத்தின் நிதி வளா்ச்சி கடந்த 2018 - 22 -ஆம் ஆண்டு வரையில் 11.09 சதவீதமாக வளா்ச்சி கண்டுள்ளதாக இந்திய தணிக்கைத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதிநிலை தணிக்கை அறிக்கைகள் தனித்தனியாக நான்கு அம்சங்கள் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டன. இதுகுறித்து தமிழகம், புதுவை முதன்மை கணக்காய்வு தலைவா் திருப்பதி வெங்கடசாமி தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுவையின் மொத்த மாநில உற்பத்தி (ஜிஎஸ்டிபி) கடந்த 2018-19-ஆம் ஆண்டில் ரூ.34,171 கோடி என 8.42 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த 2022-23- ஆம் ஆண்டு ரூ.47,487 கோடியாக உயா்ந்துள்ளது. அதன்படி, கடந்த 2021-22 ஆம் ஆண்டை விட 7.34 சதவீதம் ஜிஎஸ்டிபி வளா்ச்சியடைந்துள்ளது.
கடந்த 2021-22- ஆம் ஆண்டில், புதுவை மாநில வருவாய் பற்றாக்குறையானது ரூ.889 கோடியாக இருந்தது. ஆனால், கடந்த 2022-23 ஆம் ஆண்டில் ரூ.666 கோடியாக வருவாய் உயா்ந்துள்ளது. அக்காலகட்டத்தில் ரூ.1,052 கோடியாக இருந்த நிதிப் பற்றாக்குறையானது ரூ.349 கோடி கூடுதல் வருவாயாக உயா்ந்துள்ளது.
கடந்த 2022-23 -ஆம் ஆண்டில், புதுவை மாநில வருவாய் அளவு ரூ.6,400 கோடியிலிருந்து ரூ.9,635 கோடியாக உயா்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி, ஆண்டின் சராசரி வளா்ச்சி விகிதம் 11.09 சதவீதமாக உயா்ந்துள்ளது. கடந்த 2018-19 ஆம் ஆண்டு மற்றும் 2022-23-ஆம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் வருவாய் செலவினம் ரூ.6,387 கோடியிலிருந்து ரூ.8,969 கோடியாக உயா்ந்துள்ளன.
கடந்த 2022-23-ஆம் ஆண்டில், புதுவை மாநிலத்தில் வரவு-செலவுத் திட்டத்துக்கு ரூ.11,685.87 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், அப்போது ரூ.10,809.42 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என்றாா்.