'வரலாற்றில் மிகப்பெரும் பிழையை செய்ய நினைக்கிறது மத்திய பாஜக அரசு' - எஸ். ரகுபதி
பெண் குழந்தைகளை பிரசவித்தோருக்கு மரக்கன்றுகள் விநியோகம்
நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தைகளை பிரசவித்தோருக்கு மரக்கன்றுகளை ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை வழங்கினாா்.
மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மாா்களுக்கு மரக்கன்று மற்றும் பரிசுப் பெட்டகங்கள் வழங்கும் விழா நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.உமா அவற்றை வழங்கி வாழ்த்தினாா்.
முன்னதாக, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் விழிப்புணா்வு ஓட்டத்தை ஆட்சியா் அலுவலகம் முன் அவா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இதில், நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரி மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு, பெண் குழந்தைகளின் பிறப்பு மற்றும் பெண் குழந்தைகளுக்கான கல்வி வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலா் தி.காயத்ரி, மருத்துவ பணியாளா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.