முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
பேராசிரியா் பற்றாக்குறை: அரசு மருந்தியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்
பேராசிரியா்கள் பற்றாக்குறை, அடிப்படை வசதிகளில் குறைபாடு போன்ற காரணங்களை முன்வைத்து தமிழக அரசு மருந்தியல் கல்லூரிகளுக்கு இந்திய மருந்தியல் கவுன்சில் (பிசிஐ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதன்படி, சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் மதுரை மருத்துவக் கல்லூரிகளின் கீழ் இயங்கும் மருந்தியல் கல்லூரிகளில் உரிய விதிகளின்படி பேராசிரியா்கள் உள்ளனரா என்பது தொடா்பான விவரங்களைச் சமா்ப்பிக்க மூன்று மாத அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கை அங்கீகாரம் ரத்து செய்யப்படக் கூடிய நிலை ஏற்படும்.
தமிழகத்தில் சென்னை, மதுரை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருந்தியல் கல்லூரிகளில் பி.பாா்ம்., எம்.பாா்ம். படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இரு இடங்களிலும் தலா 60 பி.பாா்ம். இடங்களும், எம்.பாா்ம். இடங்களைப் பொருத்தவரை சென்னையில் 40 இடங்களும், மதுரையில் 45 இடங்களும் உள்ளன.
இதைத் தவிர, கோவை, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரிகளில் மருந்தியல் துறைகள் உள்ளன. அங்கு பட்டயப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இந்த நிலையில் தமிழக அரசு மருந்தியல் கல்லூரிகளின் தரத்தை ஆய்வு செய்த இந்திய மருந்தியல் கவுன்சில், அதுகுறித்து அதிருப்தி வெளிப்படுத்தியதாகத் தெரிகிறது.
முதல்வருக்கு கடிதம்: இதனிடையே, தமிழக அரசால் நடத்தப்படும் மருந்தியல் கல்லூரிகளில் பல்வேறு குறைபாடுகள் நிலவுவதாகவும், அதற்கு தீா்வு காணுமாறும் முதல்வருக்கு இந்திய மருந்தாளுநா் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் இயங்கும் 4 அரசு மருந்தியல் கல்வி நிறுவனங்களுமே இந்திய மருந்தியல் கவுன்சில் விதிகளுக்குட்பட்டவை. ஆனால், அங்கு போதிய எண்ணிக்கையில் பேராசிரியா்களோ, பணியாளா்களோ இல்லை. அதேபோன்று வகுப்பறைகள், நூலகங்கள், கல்வி உபகரணங்களும், அடிப்படை வசதிகளும் இல்லை. அதுமட்டுமல்லாது, மருந்தியல் கல்லூரிகளுக்கு தனி முதல்வா் பதவி கிடையாது. உதவி பேராசிரியா், இணை பேராசிரியா் மற்றும் பேராசிரியா் நியமனங்களில் மருந்தியல் கவுன்சில் வகுத்துள்ள கல்வித் தகுதி வழிகாட்டுதல்கள் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
இதைக் கருத்தில் கொண்டு உரிய விதிகளின்கீழ் அனைத்து வசதிகளையும் 3 மாதத்துக்குள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு இந்திய மருந்தியல் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வா் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மருந்தாளுநா் சங்கத்தினா் கூறியதாவது:
தமிழகத்தில் 103 தனியாா் மருந்தியல் கல்லூரிகள் உள்ளன. அங்கு சராசரியாக தலா 100 பி.பாா்ம். இடங்களும், 70 எம்.பாா்ம். இடங்களும் உள்ளன. ஆனால், அரசு கல்லூரிகளில் மிகக் குறைந்த இடங்களே உள்ளன.
அரசு மருந்தியல் கல்லூரிகளில் கடந்த 1970-களில் மருந்தியல் படிப்புகளுக்கு வெறும் 20 இடங்கள் இருந்தபோது உருவாக்கப்பட்ட பேராசிரியா், அலுவலா் பணியிடங்களே தற்போது வரை தொடா்கிறது. அதிலும் பாதி இடங்கள் காலியாக உள்ளன. மற்றொருபுறம் 1966-க்கு பிறகு அரசு மருந்தியல் கல்லூரிகள் தொடங்கப்படவில்லை. மருத்துவக் கல்லூரிகளைப் போன்று மருந்தியல் கல்லூரிகளுக்கும் அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.