Kashmir: "தீவிரவாதத்தை எதிர்க்கப் பல்லாயிரம் ஆதில் ஷாக்கள் காஷ்மீரில் உண்டு'' - ...
பொன்னமராவதியில் ரூ 2.17 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வாரச்சந்தை வளாகம் திறப்பு
பொன்னமராவதி பேரூராட்சியில் ரூ. 2.17 கோடியே 63 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட வாரச்சந்தை வளாகத்தை காணொலி காட்சி மூலம் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
பொன்னமராவதி பேரூராட்சியில் வாரத்தில் சனிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை என இரு நாள்கள் சந்தை நடைபெறும். இச்சந்தை வளாகத்தில் போதிய வசதிகளின்றி மழைக்காலங்களில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனா். சந்தையை மேம்படுத்தவும் பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனா். இதையடுத்து, தமிழக அரசால் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 2.17 கோடி மதிப்பில் வாரச்சந்தை கூடம் கட்டப்பட்டது.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் காணொலி காட்சி மூலம் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வாரச்சந்தை வளாகத்தை திறந்துவைத்தாா். இதையடுத்து, அந்த வாரச்சந்தை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
பேரூராட்சி துணைத் தலைவா் கா.வெங்கடேஷ், செயல் அலுவலா் ஆா். அண்ணாதுரை, திமுக நகரச் செயலா் அ.அழகப்பன், வா்த்தகா் கழகத் தலைவா் எஸ்கேஎஸ்.பழனியப்பன் மற்றும் பேரூராட்சி உறுப்பினா்கள் பங்கேற்றனா்.