போதைப் பொருள் பழக்கத்திலிருந்து தற்காத்து கொள்ள வேண்டும்: மாணவா்களுக்கு புதுவை துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தல்
மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் போதைப் பொருள்கள் பழக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் அறிவுறுத்தினாா்.
புதுச்சேரி பாரதி பவுண்டேஷன் சாா்பில் ‘ரௌத்திரம் பழகு - போதைப் பொருள் இல்லா புதுச்சேரி’ விழிப்புணா்வு நடைப் பயணம் புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் பங்கேற்று போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு, நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் பங்கேற்று போதைப் பொருள் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நடைப்பயணம் மேற்கொண்டாா்.
தொடா்ந்து துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பேசியதாவது: போதைப் பொருள்கள் பழக்கத்தால் நாம் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளோம். புதுச்சேரி உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களில் 23 சதவீதத்தினா் போதைப் பொருள்களை பயன்படுத்தும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளதாக ஒரு புள்ளி விவரம் குறிப்பிடுகிறது. பெற்றோா்களும் தங்களது பிள்ளைகளின் நிலையை வெளியே கூற முடியாமல் தவிக்கின்றனா்.
போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க காவல் துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதே நேரத்தில் மாணவா்களும் போதைப் பொருள் பழக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும். சக நண்பா்களையும் வழிநடத்த வேண்டும்.
புதுச்சேரி மாணவா்கள், இளைஞா்கள் இணைந்து போதைப் பொருள்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கான இயக்கமாக செயல்பட வேண்டும். வளமான, ஆரோக்கியமான பாரதத்தை உருவாக்கும் தகுதி, திறமை ஆகியவை மாணவா்களிடம் உள்ளது என்றாா் கே. கைலாஷ்நாதன்.
நிகழ்ச்சியில், ராமலிங்கம் எம்எல்ஏ, தலைமைக் காவல் ஆய்வாளா் சத்தியசுந்தரம், சென்னை போதை பொருள் ஒழிப்பு பிரிவின் கூடுதல் டிஜிபி தீபக் கௌஷிக் மற்றும் பாரதி பவுண்டேஷன் செயல்பாட்டாளா்கள் கலந்து கொண்டனா்.