Vedan: ``பணத்திற்காக சாதியை விற்க வேண்டிய அவசியம் எனக்கில்லை'' - விமர்சனத்துக்கு பதில் அளித்த வேடன்
2020-ம் ஆண்டு, ``நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல..." என்பது போன்ற சாதி, வர்க்க, மத அடக்குமுறைகளுக்கு எதிராக `வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' என்ற தலைப்பில் தனியிசைப்பாடலை வெளியிட்டார் ராப் பாடகர் வேடன்.
அவரின் இசையும், குரலும், உணர்ச்சி கொந்தளிக்கும் வார்த்தைகளும் மலையாள உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தது. அப்போது முதல் வேடனின் பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் வரவேற்பட்டன. குறிப்பாக வேடனின் பாடல்களில் சாதி, அடக்குமுறைக்கு எதிரான புரட்சிகரக கருத்துகள் நிறைந்திருந்தன.

இந்த நிலையில், மலையாள ராப்பர் வேடன் தனது பாடல்களில் சாதியக் குறிப்புகள் மூலம் சம்பாதிப்பதாக ஒரு சாராரால் விமர்சிக்கப்பட்டார். இந்த விமர்சனத்துக்கு ராப் பாடகர் வேடன் பதிலளித்திருக்கிறார்.
கொச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர்,``எனது எந்தப் பாடலிலும் நான் சாதியைப் பற்றிப் பேசியதாக எனக்குத் தெரியவில்லை. எனது எந்தப் பாடல் சாதியைப் பற்றிப் பேசுகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நான் சாதியைப் பற்றிப் பேசவில்லை, சாதிக்கு எதிராகப் பேசுகிறேன். வேடன் பணத்திற்காக சாதியை விற்கத் தேவையில்லை. என் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்து என் நேரத்தை வீணடிக்கமாட்டேன்.
என் வேலையில் முழுமையாக ஈடுபடுவதில் மகிழ்ச்சியைக் காண்கிறேன். நான் செய்யும் வேலை எப்போதும் ஏதோ ஒரு வகையான எதிர்வினையைச் சந்திக்கும் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் நான் தொடர்ந்து வேலை செய்வேன்.
வரலாற்று ரீதியாக கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களில், படிப்பு என்பது அன்றாட வாழ்க்கையின் இயல்பான பகுதியாக இல்லை. இன்றும் கூட, அத்தகைய பின்னணியைச் சேர்ந்த குழந்தைகள் கல்விக்காக போராடி வருகின்றனர்.

அத்தகைய சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் படித்து தகுதி மூலம் வெற்றி பெற்றாலும், இடஒதுக்கீட்டினால் மட்டுமே அவர்கள் அங்கு வந்ததாக கூறுகிறார்கள். எனவே, நீங்கள் என்ன சொன்னாலும், அது சரியாகப் புரிந்து கொள்ளப்படாது.
எனது கருத்திலிருந்து ஏதோ ஒரு வார்த்தை எடுக்கப்பட்டு கொண்டாட்டமாகவோ அல்லது விவாதத்தின் தலைப்பாகவோ மாற்றப்படுகிறது. ஆனாலும் சமூகப் பிரச்னைகளை முன்னிலைப்படுத்த எனது இசையைப் பயன்படுத்துவதில் உறுதியாக இருக்கிறேன்" என்றார்.