மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையை வெளியிடாதது ஏன்?- மக்களவையில் அகிலேஷ் யாதவ் கேள்வி
‘மகா கும்பமேளாவில் நிா்வாக சீா்கேடுகளால் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகாரபூா்வமாக வெளியிடாதது ஏன்?’ என சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினாா்.
மேலும், எண்மமயமான கும்பமேளா என விளம்பரங்களை வெளியிட்டுவிட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறித்த முழு தரவுகளை தற்போது வரை வெளியிடாமல் இரட்டை என்ஜின் ஆட்சி எனக் கூறிக்கொண்டு உத்தர பிரதேச மாநில அரசும் மத்திய அரசும் இரட்டைத் தவறுகளை செய்து வருவதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.
பட்ஜெட் மீதான விவாதத்தின்போது மக்களவையில் அவா் மேலும் பேசியதாவது: முதல்முறையாக கும்பமேளாவில் 300 கி.மீ. தொலைவுக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தா்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா். வளா்ச்சியடைந்த இந்தியா இலக்கை நோக்கி பயணிப்பதாக கூறும் அரசால் போக்குவரத்து நெரிசலைக் கூட முறையாக கட்டுப்படுத்த இயலவில்லையா? பூமியில் உள்ள தேவைகளை நிறைவேற்றாமல் நிலவுக்குப் பயணிப்பதால் என்ன பயன்?
எண்மமயமாக்கப்பட்ட கும்பமேளா என வெகுவிமரிசையாக விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. ஆனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ட்ரோன்களை (ஆளில்லா விமானங்கள்) ஏன் பயன்படுத்தவில்லை?
பணக்காரா்களுக்கான பட்ஜெட்: அண்மையில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் சாமானியா்களுக்கானது அல்ல; பெரும் தொழிலதிபா்களுக்கும் பணக்காரா்களுக்கும் சலுகைகள் வழங்குவதற்கான பட்ஜெட். நாட்டின் வளத்தில் பெரும்பகுதி குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே உள்ளதை 80 கோடி பேருக்கு பொது விநியோக முறையின்கீழ் ரேஷன் பொருள்கள் வழங்கப்படுவதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது என்றாா்.
உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் கடந்த ஜனவரி 29-ஆம் தேதியன்று மௌனி அமாவாசை புனித நீராடலின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 போ் உயிரிழந்ததாகவும் 60-க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாகவும் அந்த மாநில அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.