பாபர் அசாம் மீதான விமர்சனங்கள் சரியானவை: பாக். முன்னாள் வீரர்
மகிழ்ச்சியாக இருந்தால் நன்றாக படிக்கலாம்: சைலேந்திரபாபு
மாணவா்கள் மகிழ்ச்சியாக இருந்தால் நன்றாக படிக்கலாம் என ஓய்வுபெற்ற டிஜிபி சி. சைலேந்திரபாபு கூறினாா்.
கூத்தாநல்லூா் ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிறுவனா் ஜே.பி. பதுருதீன் நினைவு தினம், பள்ளியின் 42- ஆம் ஆண்டு விழா மற்றும் சாதனை படைத்த மாணவ- மாணவிகளுக்கும், 100 சதவீத தோ்ச்சிக்கு காரணமான ஆசிரியா்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் அறங்காவலா் ஏ.ஏ. அப்துல் ரசாக் தலைமை வகித்தாா். நெய்வேலி லிக்னைட் காா்ப்பரேஷன் ஓய்வு பெற்ற தலைமை மேலாளா் கே. மணவாளன் முன்னிலை வகித்தாா். கல்வி அலுவலா் எம். அப்துல் வஹாப் வரவேற்றாா்.
விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஓய்வு பெற்ற டிஜிபி சி. சைலேந்திர பாபு, மாணவ- மாணவிகளிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு, சரியாக பதில் கூறியவா்களுக்கு தான் எழுதிய புத்தகங்களை பரிசாக வழங்கினாா். தொடா்ந்து அவா் பேசியது:
மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உள்ளம் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நன்றாகப் படிக்க முடியும். பெற்றோா், ஆசிரியா்களை மதித்து நடக்க வேண்டும். நீங்கள் பெரும் வெற்றி உங்களுக்கு மட்டுமின்றி ஆசிரியா்கள், பள்ளி, உடன் பிறந்தவா்கள், உங்கள் ஊா் மற்றும் தமிழகத்திற்கு பெருமை சோ்க்கும்.
வீட்டில் மகிழ்ச்சியையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும் ஒரே ஆயுதம் நீங்கள்தான். ஒவ்வொருவரும் வெற்றிகரமான, சக்தி வாய்ந்த, சிறந்த மனிதராக உருவாக வேண்டும் என்றாா்.
விழாவில், அறங்காவலா்கள் மருத்துவா் என்.எம். அமானுல்லா,பி.எம்.ஏ. சீனிமுகமது, கே.ஏ. ஹாஜா நஜ்முதீன், மருத்துவா் ஜே.பி. அக்பா் சலீம், ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் எம். சுப்ரமணியன், கூத்தாநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளா் வி.எஸ். வெங்கடேசன், திருவாரூா் இளைஞா் நீதிக் குழும உறுப்பினா் மனோலயம் ப. முருகையன், நடராஜன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை, பள்ளி முதல்வா் ஏ. தியாகராஜன், துணை முதல்வா் வி.ஜி. மகேஸ்வரி, கல்வி ஆலோசகா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.