மணிப்பூர்: 4 கிளர்ச்சியாளர்கள் கைது! நவீன வெடிகுண்டுகள், ஆயுதங்கள் பறிமுதல்!
மணிப்பூரின் கிழக்கு இம்பால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 4 கிளர்ச்சியாளர்களைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
கிழக்கு இம்பால் மாவட்டத்தின் நாவோரெம் பிராஹரி கல்லூரிக்கு அருகில் சமீபத்தில் இரண்டு பேர் கடத்தப்பட்ட விவகாரத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த ஒரு பெண் உள்ளிட்ட 3 கிளர்ச்சியாளர்களை நேற்று (ஏப்.21) பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் அதன் குண்டுகள், 6 செல்போன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேபோல், அம்மாவட்டத்தின் சவோம்பங் பகுதியில் தடைசெய்யப்பட்ட ப்ரெபாக் எனும் அமைப்பைச் சேர்ந்த குந்த்ராக்பம் காதோ சிங் (வயது 22) எனும் கிளர்ச்சியாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று (ஏப்.21) கிழக்கு இம்பாலின் கெய்ரோ வாங்கெம் கிராமத்தின் அருகில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் பல்வேறு விதமான துப்பாக்கிகள், அதன் குண்டுகள், ஒரு வயர்லெஸ் செட் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, தெங்னௌபால் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை (ஏப்.19) அன்று பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் 22 ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டுகள், 7 செல்போன்கள் மற்றும் உருமறைப்பு ஆடைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:ஜம்மு - காஷ்மீர்: சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி!