ஈரானுக்கு உதவத் தயார்! அமெரிக்க தாக்குதலுக்கு கடும் கண்டனம்! - ரஷியா
மதுபோதையில் தகராறு: கணவனை காய்கறி வெட்டும் கத்தியால் குத்திக் கொலை செய்த மனைவி!
மதுபோதையில் தகராறு செய்த காதல் கணவனை காய்கறி வெட்டும் கத்தியால் மனைவி குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே ஓலைப்பாடி ஊராட்சி எருமைப்பட்டி கீழத்தெரு கிராமத்தில் வசித்து வருபவர் கலியமூர்த்தி (45). இவரது மனைவி சிந்தனைச் செல்வி (25). இவர்களுக்கு சுனிஷ்கா (9) மற்றும் சிவகார்த்திகேயன் (7) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கலியமூர்த்தி மற்றும் சிந்தனைச் செல்விக்கு 10-ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் மனைவியிடம், கணவன் குடிபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வழக்கம் போல நேற்றிரவு(ஜூன் 22) கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கலியமூர்த்தி அவரது மனைவியை குடிபோதையில் திட்டி அடித்ததாகவும் அப்போது ஆத்திரம் அடைந்த அவரது மனைவி சிந்தனைச்செல்வி காய்கறி வெட்டும் கத்தியால் கணவன் கலியமூர்த்தியின் இடது கழுத்தில் குத்தியதில், அதிகப்படியான ரத்தம் வெளியேறி கலியமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இது குறித்து உயிரிழந்த கலியமூர்த்தியின் தாயார் கமலம்பாள் (65) கபிஸ்தலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் உயிரிழந்த கலியமூர்த்தியின் பிரேதத்தை கைப்பற்றிய போலீஸார் உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து சிந்தனைச் செல்வியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: தென்காசி காப்பகத்தில் மேலும் ஒருவர் பலி!