உன் பேச்ச கேட்காம ஒரு வேலை சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்றேன்! - அப்பாவிற்கு மகனின் மன...
International Widow's Day: ஏன் ஜூன் 23-ம் தேதி சர்வதேச விதவைகள் தினம்?
இன்று சர்வதேச விதவைகள் தினம் (ஜூன் 23). வாழ்க்கைத்துணையை இழந்த பெண்கள் எதிர்கொள்ளும் வறுமை மற்றும் சமூக அநீதிகளை முழு உலகுக்கும் தெரியப்படுத்தி, அவர்களின் அனைத்து உரிமைகளுக்காகப் போராட ஐக்கிய நாடுகள் சபை 2010-ல் ஜூன் 23-ம் தேதியை சர்வதேச விதவைகள் தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த வருடத்தின் (2025) கருப்பொருள், 'அவர்களுக்கும் அதிகாரம் கொடுங்கள்; இழப்பிலிருந்து தலைமைப் பொறுப்பிற்கு வரும் வரை' என்கிற அர்த்தம் தருகிற 'Empower Her; From Loss to Leadership' என்கிற வாசகத்தை வெளியிட்டுள்ளது ஐ.நா.

இந்த நாளுக்கான விதை நம் பஞ்சாபில் விதைக்கப்பட்டது. ஒரு பணக்கார தொழிலதிபரான ஜாகிரி லால் லூம்பா, ஜூன் 23, 1954 அன்று காசநோயால் இறந்தார். விளைவு, அவருடைய மனைவி புஷ்பா வாட்டியும் 7 குழந்தைகளும் பெரும் இன்னல் அடைந்தனர். அவர்களில் ஒரு பிள்ளை தான் ராஜ் லூம்பா. தன்னுடைய தாயை விதவைக்கோலம் பூண வைத்த பாட்டியையும், உறவினர்களையும் அந்த சிறுவன் அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
ராஜ் லூம்பாவின் தாயார், தன்னுடைய ஏழு குழந்தைகளையும் டிகிரி வரை படிக்க வைத்தார். ராஜ் லூம்பா நன்கு படித்து வெளிநாடு சென்று ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் ஆனார். பிறகு, தன்னுடைய திருமணத்துக்காக இந்தியா வந்தபோது, ராஜ் லூம்பாவின் திருமணத்தை நடத்த வந்த புரோகிதர், அவருடைய அம்மா புஷ்பா வாட்டியை 'நீங்கள் விதவை என்பதால் அபசகுனம் ஆகவர். உங்கள் மகனின் திருமணத்தின்போது நீங்கள் அருகே இருக்கக்கூடாது' என்றிருக்கிறார். இந்த சம்பவம் ராஜ் லூம்பாவின் மனசை வெகுவாக கஷ்டப்படுத்தி இருக்கிறது.

'எங்கள் அப்பா மட்டும் எங்களுக்கான பொருளாதாரத்தை விட்டுச் செல்லவில்லை என்றால், எங்கள் அம்மாவால் எங்களைப் படிக்க வைத்திருக்க முடியாது. ஆனால், ஏழை விதவைகளின் நிலைமை' என்று யோசித்தவர், 2005-ல் 'லூம்பா' என்கிற அறக்கட்டளையை ஆரம்பித்து ஏழை விதவைகளின் குழந்தைகள் படிப்பதற்கான உதவிகளை செய்ய ஆரம்பித்தார். தவிர, விதவைப்பெண்களுக்கும் பல்வேறு துறைகளில் பயிற்சி அளித்து, அவர்கள் சொந்தக்காலில் நிற்பதற்கு உதவி செய்ய ஆரம்பித்தார். உலக அளவில் விதவைகளின் நலனை முன்னுறுத்தி செயல்பட்டு வரும் இந்த 'விதவைகளின் போராளி'யான ராஜ் லூம்பாவின் தாயார் விதவையான ஜூன் 23-ம் தேதியையே ஐக்கிய நாடுகள் சபை 'உலக விதவைகள் தினமாக' அறிவித்தது.
உலகம் முழுவதும் 258 மில்லியன் விதவைகள் இருப்பதாகவும், அதில் பத்தில் ஒருவர் மிகவும் வறுமையில் வாழ்வதாகவும் ஐக்கிய நாடுகளின் சபை குறிப்பிடுகிறது. 258 மில்லியன் விதவைகளில், குழந்தைப்பருவத்து விதவைகள் குறைந்தபட்சம் 1.36 மில்லியன் பேர் இருக்கலாம் என்கிறது ஐ.நா. தவிர, கோவிட் நேரத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் விதவைகளானதாக அது மேலும் தெரிவிக்கிறது.
மனிதர்களால் தாங்க முடியாத இரண்டு வலிகளில் இரண்டாவது இடத்தில் இருப்பது, பிரசவ வலி. முதலாவது இடத்தில் இருப்பது தீ விபத்தில் உயிரிழப்பது. ஒருகாலத்தில், கணவரை இழந்தப் பெண்கள் உடன்கட்டை ஏறுதலில் இந்தக் கொடுமையைத்தான் அனுபவித்தார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை, 2011-ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் வாழும் விதவைகளின் மொத்த எண்ணிக்கை 4.3 கோடி. இது நாட்டிலுள்ள மொத்தப் பெண்களது எண்ணிக்கையில் 7.3 சதவீதம். தமிழகத்தை பொறுத்தவரை, 2011-ம் ஆண்டு அடிப்படையில் வாழும் விதவைப் பெண்களின எண்ணிக்கை 38.56 லட்சமாக இருந்தது. கொரோனாவுக்குப் பிறகு இந்தியாவிலும், தமிழகத்திலும் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் எனக் கருதப்படுகிறது.
மனிதர்களால் தாங்க முடியாத இரண்டு வலிகளில் இரண்டாவது இடத்தில் இருப்பது, பிரசவ வலி. முதலாவது இடத்தில் இருப்பது தீ விபத்தில் உயிரிழப்பது. ஒருகாலத்தில், கணவரை இழந்தப் பெண்கள் உடன்கட்டை ஏறுதலில் இந்தக் கொடுமையைத்தான் அனுபவித்தார்கள். குழந்தைத் திருமணத்தில் விதவையானாலும், அவர்களுக்கு மறுமணம் அனுமதிக்கப்படவில்லை. மதம், இனம், மொழி பிரிந்துகிடந்தாலும், விதவைகள் விஷயத்தில் நம் சமூகம் ஒரே மாதிரியான மனப்பான்மையைத்தான் கொண்டிருந்தது. சிலர் விதவைகளை மொட்டையடிக்க வைத்தார்கள்; சிலர் அவர்களை ஜாக்கெட் அணிய தடை விதித்தார்கள்; சிலர் அவர்களை உப்பில்லாமல் சாப்பிட பழக்கினார்கள்; அவர்களைப் பார்த்தால் அபசகுனம்; விசேஷங்களில் கலந்துகொள்ளக்கூடாது... என இந்த சமூகம் அவர்களை விதவிதமாக ஒடுக்கியவற்றை இங்கே பட்டியலிடுவது மிக மிகக் கடினம்.

இவை தவிர, கல்வி மறுப்பு, அதனால் சுயமாக சம்பாதிக்க இயலாமை, பிறந்த வீடும் புகுந்த வீடும் கைவிட்ட நிலை, சொத்தில் பங்கில்லை, தாங்க முடியாத வறுமை, பிள்ளைகளுக்கு வயிறார உணவளிக்க முடியாமை மற்றும் அவர்களை படிக்க வைக்க இயலாமை, மற்ற ஆண்களின் தவறானப் பார்வை என வாழ்க்கைத்துணையை இழந்தப் பெண்களுடைய நிலைமை எந்த வகையிலும் பாதுகாப்பானதாகவோ, நிம்மதியாகவோ இருக்கவில்லை என்பதே சுடும் உண்மை.
தற்போது இந்தியாவில் விதவைகளின் மறுமணம், சொத்துரிமை, சமூக பாதுகாப்பு ஆகியவற்றை, சட்டம் தன் கையில் எடுத்து பாதுகாத்து வருகிறது. இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் படி மகன்கள் மற்றும் மகள்கள் போலவே விதவைகளும் கணவரின் சொத்தில் சமபங்கு பெறலாம். இந்து விதவைகள் மறுமணச் சட்டம் இந்து விதவைகளின் மறுமணத்தை சட்டப்பூர்வமாக்கியது. குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்,
திருமணமான பெண்களை குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாக்கிறது, விதவைகளும் இந்த சட்டத்தின் மூலம் பயனடையலாம். தவிர, மத்திய மற்றும் மாநில அரசுகள் வாழ்க்கைத்துணையை இழந்த பெண்களுக்கு நிதி உதவியோடு, பல்வேறு சமூக பாதுகாப்புத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றன.
பாதுகாப்பான, நிம்மதியான வாழ்க்கை எல்லோருக்கும் அவசியம்! வாழ்க்கைத்துணையை இழந்தப்பெண்களுக்கும்..!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...