போதைப்பொருள் விவகாரம்: கைதான நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவப் பரிசோதனை
நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் இன்று(ஜூன் 23) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று அதிகரிகள் தெரிவித்தனர்.
நடந்தது என்ன?
கடந்த சில நாள்களுக்கு முன்பாக அதிமுக நிர்வாகி பிரதீப் சென்னையில் உள்ள தனியார் மதுபானக் கூடத்தில் நடந்த அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இவரது செல்ஃபோனை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதில் உள்ள வாட்ஸ்ஆப் எண்ணை சோதனை செய்தபோது, அதிமுக முன்னாள் நிர்வாகி பிரதீப்புடன், நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங்கியதாக தரவுகள் கிடைத்துள்ளது.
இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில், பிரதீப் அளித்துள்ள வாக்குமூலத்தில் ஸ்ரீகாந்த் 40 முறை போதைப்பொருள் வாங்கி உள்ளதாகவும் அதற்கான பணத்தை பிரதீப்புக்கு ஸ்ரீகாந்த் அனுப்பி உள்ளார் என்றும் தெரிவித்தார். மொத்தம் 4 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன் அடிப்படையில், இன்று(ஜூன் 23) காலை 8 மணி அளவில் நடிகர் ஸ்ரீகாந்த்தை காவல்துறையினர் விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்தனர்.
அப்போது அவர் போதைப்பொருள் பயன்படுத்தினாரா என்பதை உறுதிசெய்ய அறிவியல் பூர்வமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சென்னை மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் உள்ள மருத்துவமனையில் அவரை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தி பரிசோதனை செய்ததில், ஆய்வு முடிவுகளில் ஶ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது. இந்தநிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.