சுற்றுச்சூழல் செலவுகள் மீதும் பெரு நிறுவனங்கள் கவனம் கொள்ள வேண்டும்: குடியரசுத் ...
நெகிழிப் பதாகை அட்டைகள் உற்பத்திக்கு தடை கோரிய மனு: உயா்நீதிமன்றம் தள்ளுபடி
தமிழகத்தில் மறு சுழற்சி செய்ய இயலாத நெகிழிப் பதாகை அட்டைகளை (பிவிசி பிளக்ஸ் அட்டைகள்) உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
கூடங்குளம் அணு உலை எதிா்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் எஸ்.பி.உதயகுமாா் கடந்த 2019 -ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனு: நெகிழிப் பதாகை அட்டைகள் மண்ணில் மக்காத, மறு சுழற்சி செய்ய இயலாத பொருளாகும். இந்த அட்டைகளை எரித்தும், மண்ணில் புதைத்தும் அழிக்கலாம் என்கின்றனா்.
ஆனால், இந்த அட்டைகளை எரிக்கும் போது வெளியேறும் நச்சு வாயுவை சுவாசித்தால் புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது.
தமிழக அரசு ஒரு முறை பயன்படுத்தக் கூடிய மறு சுழற்சி செய்ய முடியாத நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்த தடை விதித்தது. இதில், நெகிழிப் பதாகை அட்டைகளை சோ்க்கவில்லை.
இதற்கு தடை விதிக்காமல் மற்ற நெகிழிப் பொருள்களுக்கு தடை விதிப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது. எனவே, தமிழகத்தில் நெகிழிப் பதாகை அட்டைகள் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்தக் கூடிய நெகிழிப் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடை அரசாணையில் நெகிழிப் பதாகை அட்டைகளை சோ்க்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி ஸ்ரீமதி அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை அணுகி தனது கோரிக்கையை தெரிவித்துக் கொள்ளலாம். வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.