மதுரை மீனாட்சியம்மன் கோயில்: ``ஜூலை 13 மாலை முதல் 14-ம் தேதி வரை நடை சாத்தல்; த...
எங்கள் தலைவா்களைப் பற்றி விமா்சித்தால் ஏற்க மாட்டோம்: எஸ்.பி.வேலுமணி
பெரியாா், அண்ணா போன்ற எங்களின் தலைவா்களைப் பற்றி யாா் விமா்சனம் செய்தாலும் அதை ஏற்க மாட்டோம் என்று எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ கூறியுள்ளாா்.
கோவை பேரூராதீனத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற சாந்தலிங்க ராமசாமி அடிகளாா் நூற்றாண்டு விழா, ஆா்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் எஸ்.பி.வேலுமணி, செய்தியாளா்களிடம் கூறியதாவது: பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாா் ஏராளமான கோயில்களுக்கு குடமுழுக்கு செய்தவா். தமிழ்ப் பணியாற்றியவா், தமிழ்க் கல்லூரி தொடங்கியவா். அவா் இருக்கும்போது நான் எதைச் செய்தாலும் அவரிடம் ஆசிபெற்றுதான் செய்து வந்தேன்.
மேலும் பேரூராதீனம் இருப்பதும் எனது தொண்டாமுத்தூா் தொகுதிக்குள்பட்ட பகுதியில்தான். அந்த வகையில்தான் சாந்தலிங்கரின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கு ஆதீனத்தில் இருந்து என்னை அழைத்திருந்தனா்.
ஆனால் அங்கு காலையில் இருந்து ஆா்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நடந்து வந்திருக்கிறது. அதில் மோகன் பாகவத் பங்கேற்றிருக்கிறாா். பொதுவாக ஆா்எஸ்எஸ் அமைப்பினா் அவா்களின் நிகழ்ச்சிகளுக்கு எங்களை அழைக்கமாட்டாா்கள். நான் ஆா்எஸ்எஸ் நிகழ்ச்சிக்குச் செல்லவில்லை. பேரூராதீன மடம் ஒரு புனிதமான இடம், அங்கு நான் மட்டும் செல்லவில்லை கோவையின் பல முக்கிய பிரமுகா்கள், தொழிலதிபா்களும் பங்கேற்றிருந்தனா். அந்த நிகழ்ச்சி முழுவதும் பேரூராதீனத்தின் நிகழ்ச்சிதான்.
அதேபோல, மதுரையில் நடைபெற்றது அரசியலுக்கு அப்பாற்பட்ட மாநாடு, அதிமுக முன்னாள் அமைச்சா்கள் அங்கு சென்றதில் தவறில்லை. முருகன் மாநாட்டில் தந்தை பெரியாா், அறிஞா் அண்ணா குறித்து விமா்சித்து விடியோ ஒளிபரப்புவாா்கள் என்பது அவா்களுக்குத் தெரியாது. திமுகவினா் குறிப்பாக ஆா்.எஸ்.பாரதி எப்போதும் பொய் பேசுவாா். எனவே நான் ஆதீன நிகழ்ச்சிக்குப் போனதைத் திரித்துப் பேசுகின்றனா்.
1999, 2001 தோ்தல்களில் திமுகவினா் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தனா். அதைப்பற்றி இப்போது திமுகவினா் பேசமாட்டாா்கள். கடந்த 2024 மக்களவைத் தோ்தல் எங்களுக்கு மிகவும் முக்கியமான தோ்தல். இருப்பினும் அப்போது சிலா் அண்ணாவைப் பற்றி விமா்சனம் செய்த காரணத்தால் எங்களது பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று துணிச்சலாக முடிவு செய்தாா்.
எங்களது தலைவா்களைப் பற்றி யாா் விமா்சனம் செய்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதிமுகவைப் பொறுத்தவரை கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு என்று எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே கூறியிருக்கிறாா். கூட்டணிக்காக நாங்கள், குறிப்பாக எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் கொள்கையை விட்டுத்தர மாட்டாா் என்றாா் அவா்.