தமிழா்களுக்காக ஒதுக்கப்பட்ட நரேலா பகுதி குடியிருப்புகளின் நிலை என்ன?
உங்கள் பிள்ளை இன்னும் குழந்தையாகவே தந்தையாகியிருக்கிறேன்! - மகனின் வலி | #உறவின்கடிதம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
அன்புள்ள அப்பாவிற்கு
நான் நலம். உங்கள் நலம் பற்றிய கேள்விக்கு எப்போதும் எந்த நிலையிலும் நலம் என்ற பதிலே வருமென்பதை நான் அறிவேன்.
எவ்வளவு நம்பிக்கை உங்களுக்கு என் மேல். அதே நம்பிக்கையை என்னால் உங்கள் பேரப் பிள்ளைகள் மேல் வைக்க முடிவதில்லை. எது ஒன்றும் முன்னதாக சரியாக வரும் என்று யூகிக்கும் மனது உங்களுக்கு எப்படி வாய்த்தது அப்பா. மழையை நம்பி விதை விதைக்கும் நம்பிக்கை தான் உங்களை அப்படி பழக்கியதாக நம்புகிறேன்.

எனக்குத் தெரிந்து கண்களை அகலமாக விரித்து ஆச்சரியம் கொண்டு பார்க்கும் சந்தர்ப்பம் நம் இருவருக்கும் நிகழவே இல்லை. ஆனால் இப்போது அப்படியில்லை உலகம். நொடிக்கு நொடி புது ஆடைகள் உடுத்தி உறக்கமற்ற விழிப்பைத் தருகிறது.
தனித்தனியான அறைகள் இல்லை உங்களுடனான வாழ்வில். ஒரு போதும் அது பற்றிய கற்பனைகள் கூட இல்லை. உறக்கம் வராத சிறுவர்கள் அப்போது இருந்ததில்லை என்பதால் கூட அது பற்றிய கவலையும் இல்லாமல் இருந்திருக்கலாம்.
என் மகன்களுக்கும் எனக்கும் வேறு வேறு அறைகள். நெஞ்சுக்கூட்டில் முளைத்த வெள்ளை முடியை எண்ணிப் பார்த்து இரவைக் கழித்த நாட்களின் நினைவை வைத்துக் கொண்டு மாதாந்திரத் தவணையை ஞாபகம் வைத்திருக்கிறேன் இப்போது.
பெருந்துயர் என்பதைப் புரிந்து கொண்டாலும் ஆசை அரைஞாண் கயிறு போல் இறுக்கப் பிடித்து நெருக்கும் போது அனல் பூக்க வேண்டிய முகத்தில் பூ பூத்தது போன்ற நிகழ்வை எல்லாம் இனி என் மகன்கள் என்னிடம் காண முடியாது அப்பா.
உதிரம் கடத்தி. உயிர் கடத்தி, சொல் கடத்தி நிறம் வரை கடத்தித் தந்த நீங்கள் நம்பிக்கை கடத்தியிருக்கலாம். பதியம் வைத்த செடி மரமாகாது என்பது போல் உங்கள் பிள்ளை இன்னும் குழந்தையாகவே தந்தையாகியிருக்கிறேன்.
பறவைக்கு இரை இட்டது முதல் பாதங்களில் முளை பயிர் விழாத படி நடக்க கற்று தந்த சொல்,பாடம் போல் இருந்ததில்லை உங்களிடத்தில்.

எப்போதாவது வாங்கிய அடி கூட இன்னும் ஞாபகமிருக்க காரணம் வலி அல்லவே அதற்கு பின்னான அன்புதானே.
சுரக்குடுக்கையில் நீச்சல் கற்ற போது இருந்த பயம் காற்றடைத்த ஆடை தந்த பிறகும் மகன்களை விட்டு அகல மறுக்கிறது எனக்கு.
நீங்கள் கை பிடித்து கடத்தி விட்ட பால்ய காலங்களை நானும் கடத்தி விட்டேன் அப்பா.. மகன்களுக்கு.
வறுமையை துணைக்கு தந்து விட்டு போன உங்கள் வண்டி தடத்தில் நான் மேடெறிவிட்டேன்.
நீங்கள் இல்லாத என்னுடைய வாலிப காலங்களுக்குள்ளாக அவர்கள் காலடி எடுத்து வைக்கிறார்கள் நான் என்ன செய்யட்டும்?
பதிலுக்கு காத்திருக்கிறேன்
அன்பு மகன்
முத்து ஜெயா.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.