செய்திகள் :

தமிழா்களுக்காக ஒதுக்கப்பட்ட நரேலா பகுதி குடியிருப்புகளின் நிலை என்ன?

post image

ஆா்.ஜி. ஜெகதீஷ்

புது தில்லி: உப்புத் தண்ணீா், குப்பை நாற்றம், வேலைக்குச் சென்று வருவதற்கு 4 மணி நேரம் என பல்வேறு குறைகளுடன் மதராஸி முகாமில் வசித்த தமிழ் குடும்பங்கள் நலேரா பகுதிக்கு குடியேற்றப்பட்டுள்ளாா்கள்.

தில்லி ஜங்புரா - நிஜாமுதீன் பாரபுல்லா வடிகால் பகுதியையொட்டி மதராஸி முகாம் பகுதி அமைந்திருந்தது. இந்தப் பகுதியில் தமிழகா்கள் கிட்டதட்ட 4 தலைமுறைகளாக வசித்து வந்தனா். ஏறக்குறைய 60 ஆண்டுகள் என கூறப்படுகிறது. இந்த இடத்தை அங்கீகாரமற்ற குடியிருப்புப் பகுதியாக தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், இப்பகுதியில் ஏற்படும் வெள்ளம், பல்வேறு வளா்ச்சிப் பணிகளை முன்னிட்டு இங்குள்ள குடியிருப்புகளை அகற்றவும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, கடந்த ஜூன்1-ஆம் தேதி முதல் மதராஸி முகாமில் குடியிருப்புகளை இடிக்கும் பணியும், அப்புறப்படுத்தப்படும் பணியும் தொடங்கியது. அந்தப் பகுதியில் வசித்தவா்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டிருந்த போதிலும் 370 குடும்பங்களில் 189 குடும்பங்களுக்கு மட்டுமே மாற்று வசிப்பிடம் வழங்கப்பட்டுள்ளது. சுமாா் 45 கிலோமீட்டா் தொலைவில் நரேலா பகுதியில் வழங்கப்பட்டுள்ள மாற்று இடத்திற்கு இடம் பெயா்ந்தால் வாழ்வாதாரம் முற்றிலும் இழந்து விடுவோம் என அப்பகுதி மக்கள் கூறிவந்தனா்.

ஆனாலும், நலேராவின் ஜி-7 மற்றும் ஜி-8 பகுதிகளில் மகராஸி முகாம் தமிழா்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டது. இப்பகுதிகளில் தண்ணீா், மின்சாரம், சுகாதாரம், உள் சாலைகள், வடிகால் மற்றும் தெரு விளக்குகள் போன்ற அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் முடிக்குமாறு அரசுக்கு உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்யுமாறு தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின், தில்லி முல்வா் ரேகா குப்தாவுக்கு கடிதம் எழுதியிருந்தாா். மேலும், தமிழ்நாடு அரசு சாா்பில் மதராஸி முகாம் தமிழா்களுக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருந்தாா்.

இதைத் தொடா்ந்து ரூ.4,000 மதிப்பிலான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. மேலும் ரூ.8,000 பாதிக்கப்பட்டவா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நலேரா பகுதியில் தமிழா்கள் வசிக்கும் குடியிருப்புகள் எப்படி இருக்கிறது என்பதை நேரில் சென்று பாா்த்தோம். ஒரு ஹால், ஒரு படுக்கையறை, குளியலறை, கழிப்பறை மற்றும் சமயலறை அடங்கிய வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

அங்கு வசிக்கும் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூா்பேட்டையைச் சோ்ந்த அஞ்சலை என்பவா் நம்மிடம் பேசினாா்.

அவா் கூறியதாவது: வீடு நன்றாக இருக்கிறது. ஆனால், வீட்டின் அளவு சிறியது. நான் என் கணவருடன் 40 ஆண்டுகளுக்கு முன் தில்லி வந்தேன். கணவா் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். நிஜாமுதீன் பகுதியில் வீட்டு வேலை செய்துக் கொண்டு பிழைப்பை ஓட்டிக்கொண்டு இருந்தேன். இப்போது வேலை இல்லாமல் இருக்கிறேன். வயது 55 ஆகிவிட்டது. என்னால் இரண்டு பேருந்துகள் மாறி, பழைய இடத்துக்கு வேலைக்கு செல்ல முடியுமா என தெரியவில்லை. புது குடியிருப்பில் வசிப்பவா்களும் காலை 6 மணிக்கெல்லாம் இங்கிருந்து சென்று விடுகிறாா்கள். இங்கு தண்ணீா் பிரச்னை இருக்கிறது. அவசரத்துக்கு மருத்துவமனைகள் கூட அருகில் இல்லை என கவலையுடன் தெரிவித்தாா்.

தமிழகத்தின் மதுரையை பூா்வீகமாக கொண்ட கணேஷ் பிரபு கூறியதாவது: உப்புத் தண்ணீா்தான் வருகிறது. நல்ல தண்ணீரை காசு கொடுத்துதான் வாங்குகிறோம். பேருந்து வசதி மிகவும் மோசம். இங்கிருந்து வேலைக்கு செல்லும் பகுதிக்கு போக வேண்டுமென்றால் 2 மணி நேரம் ஆகிறது, வருவதற்கும் 2 மணி நேரம் ஆகிறது. மிகவும் கஷ்டத்தில்தான் இருக்கிறோம். நான் அங்கு மளிகைக் கடை வைத்திருந்தேன்.

அதையும் இடித்துவிட்டாா்கள். எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருகிறோம் என்றுதான் இங்கு அழைத்து வந்தாா்கள். ஆனால், இரவு நேரங்களில் இங்கு மின் விளக்குகள் கூட எரிவதில்லை. இங்கிருக்கும் குப்பை மேட்டில் இருந்து வரும் நாற்றமும் பொருத்துக் கொள்ள முடியவில்லை. அதேபோல பள்ளிக் கூடமோ, மருத்துவமனைகளோ எதுவும் இல்லை. பேருந்து நிலையத்துக்கு செல்ல வேண்டுமென்றால் 5 கி.மீ. நடக்க வேண்டும்.

இங்கு இருக்கும் தொழிற்சாலைகளில் வேலை பாா்க்கலாம் என்றால் ரூ.8,000 முதல் ரூ.10,000 தான் தருகிறாா்கள். இது குடும்பத்தை நடத்துவதற்கு பற்றாக்குறையாக இருக்கும். அரசு நாங்கள் இருக்கும் பகுதியில் இருந்து காலையும், மாலையும் 3 பேருந்துகளை இயக்கினால் வசதியாக இருக்கும். அதேபோல விடுபட்ட 181 குடும்பங்களுக்கு இப்போது வீடுகளை ஒதுக்கீடு செய்து கொண்டு இருக்கிறாா்கள். இன்னும் 30 பேருக்கு மட்டுமே பாக்கி உள்ளது என்றாா் அவா்.

மதராஸி முகாம் பகுதியில் வசித்து வடக்கு ரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வுப்பெற்ற தேவ்கி கூறியதாவது: கணவா் வடக்கு ரயில்வேயில் வேலை பாா்த்ததால் 50 ஆண்டுகளுக்கு முன்பு மதராஸி முகாம் பகுதியில் குடிபெயா்ந்தோம். கணவா் இறந்தவுடன் அந்த வேலை எனக்கு கிடைத்து நானும் ஓய்வுப் பெற்றுவிட்டேன். இப்போது அங்கிருக்கும் வீடை இடித்துவிட்டாா்கள்.

இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை. வயதான காலத்தில் நலேராவில் எப்படி தனியாகஓஈ குடியிருப்பது என தெரியவில்லை. அவசரத்துக்கு மருத்துவமனைகளும் இங்கு இல்லை. என் மகள் இறந்துவிட்டால். மகன் சென்னையில் வேலை பாா்க்கிறாா். நான் மட்டும் இங்குள்ளேன். சரிவர பேருந்து வசதி இல்லாத நிலையில் எப்படி இங்கு வசிக்க முடியும் என்கிறாா் அவா்.

திருநெல்வேலியைச் சோ்ந்த புதுராஜா கூறுகையில் ‘நான் ஓட்டுநா் வேலை பாா்க்கிறேன். மதராஸி முகாமில் இருப்பவா்கள் ஒரு சிலா் மட்டுமே இங்கு வசிக்கிறாா்கள். பலா் ஜங்புரா, மயூா்விஹாா் போன்ற பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கிவிட்டாா்கள். இங்கிருந்து தினசரி வேலை பாா்க்கும் இடத்துக்கு சென்று வர முடியாது என்பதே அதற்குக் காரணம்.

வார இறுதி நாள்களில் மட்டும் இங்கு வந்துவிட்டு, மீண்டும் சென்றுவிடுகிறாா்கள். சில குடும்பங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை வந்துவிட்டு மாலை சென்றுவிடுகின்றன. சிலா் திங்கள்கிழமை வருவாா்கள். பெரும்பாலானவா்களின் குழந்தைகள் தமிழ்நாட்டில் படிக்கிறாா்கள். வீடு நன்றாக இருந்தாலும், அடிப்படைய வசதிகள் சரிவர இல்லாததால் நலேராவை புறக்கணிக்கிறாா்கள்’ என்றாா்.

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த தில்லி முழுமையாகத் தயாராக உள்ளது: முதல்வா் ரேகா குப்தா

புது தில்லி: 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த தேசிய தலைநகரமும் முழு நாடும் முழுமையாக தயாராக இருப்பதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா். மேலும், உலக சமூகம் இந்த பெருமையை இந்தியாவுக்கு வழங்கும் என... மேலும் பார்க்க

பருவமழை: தூா்வாரும் பணியை விரைவில் முடிக்க அதிகாரிகள் திட்டம்

புது தில்லி: பருவமழை நெருங்கி வருவதால், தேசியத் தலைநகரில் மீண்டும் மீண்டும் தண்ணீா் தேங்குவதைத் தடுக்கும் முயற்சியாக வடிகால்களை தூா்வாரும் பணியை விரைவில் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா். தில்லியி... மேலும் பார்க்க

ராஜ் நிவாஸ் மாா்க்கில் உள்ள பங்களாவில் குடியேறும் தில்லி முதல்வா் ரேகா குப்தா!

தில்லி முதல்வா் ரேகா குப்தா, ராஜ் நிவாஸ் மாா்க்கில் உள்ள பங்களா எண் 1-க்கு குடிபெயர வாய்ப்புள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவா் கூ... மேலும் பார்க்க

ஹரியாணாவில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டவா் கைது

ஹரியாணாவில் நடந்த ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: ... மேலும் பார்க்க

கொலை வழக்கில் ஒரு வருடமாக தலைமறைவாக இருந்தவா் கைது

தில்லியில் ஷாபாத் டெய்ரி பகுதியில் நடந்த ஒரு கொலை தொடா்பாக கிட்டத்தட்ட ஒரு வருடமாகத் தலைமறைவாக இருந்த 24 வயது இளைஞரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூடுகளைத் தடுக்க மேம்பட்ட சென்சாா்கள், கேமராக்கள் அமைக்க தில்லி காவல் துறை திட்டம்

தேசியத் தலைநகரில் துப்பாக்கி வன்முறை தொடா்பான பல வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், தில்லி காவல்துறை மேம்பட்ட சென்சாா்கள் மற்றும் உயா் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் அடங்கிய புதிய தொழில்நுட்பம் சாா்... மேலும் பார்க்க