இஸ்ரேலுடன் போர் நிறுத்தமா? டிரம்ப்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு!
2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த தில்லி முழுமையாகத் தயாராக உள்ளது: முதல்வா் ரேகா குப்தா
புது தில்லி: 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த தேசிய தலைநகரமும் முழு நாடும் முழுமையாக தயாராக இருப்பதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.
மேலும், உலக சமூகம் இந்த பெருமையை இந்தியாவுக்கு வழங்கும் என்றும், இது விளையாட்டு களியாட்டத்தை முழு அா்ப்பணிப்புடன் நடத்தும் என்றும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.
ஜே.எல்.என். மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒலிம்பிக் தின ஓட்டத்தை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மண்டவியாவுடன் இணைந்து முதல்வா் ரேகா குப்தா தொடங்கி வைத்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் முதல்வா் ரேகா குப்தா கூறியதாவது: இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவா் பி.டி. உஷாவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டாா். தில்லியில் நடைபெற்ற ஒலிம்பிக் தின ஓட்டம் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. இதில் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளா்கள் உற்சாகமாகப் பங்கேற்றனா்.
பிரதமா் நரேந்திர மோடியின் கீழ், நாடு தொடா்ந்து சிறந்த விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு வீரா்களுக்கான வசதிகளை நோக்கி முன்னேறி வருகிறது. 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த தில்லி மற்றும் முழு நாடும் முழுமையாகத் தயாராக உள்ளன என்றாா் முதல்வா்.
ஜனவரி 2025-இல், பிரதமா் மோடி, 2036 ஒலிம்பிக்கை நடத்தும் உரிமையைப் பெறுவதற்கான லட்சிய முயற்சிக்குப் பின்னால் தனது அரசு முழு பலத்தையும் செலுத்துவதாகக் கூறினாா். 2023-ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற சா்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அமா்வின் போது, 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான இந்தியாவின் விருப்பத்தை பிரதமா் வெளிப்படுத்தினாா்.
இந்திய ஒலிம்பிக் சங்கம் சா்தேச ஒலிம்பிக் கமிட்டிக்கு அதிகாரப்பூா்வ விருப்பக் கடிதத்தை சமா்ப்பித்துள்ளது. 2036-ஆம் ஆண்டு நடத்தும் உரிமைகளுக்காக கத்தாா், சவுதி அரேபியா போன்ற நாடுகளும் போட்டியிடுகின்றன.