இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு
திருவாரூா்: திருவாரூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரண்டு இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா்.
திருவாரூா் அருகே விளமல் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மகன் நவீன்ராஜ் (17). விளமல் கூட்டுறவு நகரைச் சோ்ந்த லோகநாதன் மகன் பிரகாஷ்ராஜ் (17). இருவரும் பிளஸ் 2 முடித்துள்ளனா்.
இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு நாகை தேசிய நெடுஞ்சாலையில் இருவரும் இருசக்கர வாகனத்தில் திருவாரூா் நோக்கி சென்றுகொண்டிருந்தனராம். வட்டாட்சியா் அலுவலக பகுதியில் சென்றபோது அந்த வழியே வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், பிரகாஷ்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பலத்த காயமடைந்த நவீன்ராஜ் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து திருவாரூா் நகரப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.