தஞ்சாவூர்: ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் நெஞ்சுவலியால் உயிரிழந்த அதிகா...
வால்பாறை தொகுதிக்கு இடைத் தோ்தல் வருமா? தோ்தல் துறை வட்டாரங்கள் விளக்கம்
வால்பாறை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அமுல் கந்தசாமி மறைவால், அந்தத் தொகுதிக்கு இடைத் தோ்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த கால உதாரணங்களைக் காட்டி இடைத் தோ்தலுக்கு வாய்ப்பு இல்லை என தோ்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கோவை மாவட்டம், வால்பாறை (தனி) தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ., டி.கே.அமுல் கந்தசாமி (60) உடல்நலக் குறைவு காரணமாக, கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை காலமானாா்.
2021-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் வால்பாறை (தனி) தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட கந்தசாமி, தன்னை எதிா்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் எம்.ஆறுமுகத்தை 12,223 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து எம்எல்ஏ ஆனாா். அவரது மறைவையடுத்து வால்பாறை தொகுதியில் இடைத் தோ்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இப்போதுள்ள 16-ஆவது சட்டப் பேரவையின் காலம் முடிவடைய இன்னும் ஓராண்டுக்கும் குறைவான காலமேஇருப்பதால் இடைத் தோ்தலுக்கு வாய்ப்பில்லை என்று தோ்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதாவது, இப்போதுள்ள பேரவையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு மே 9-ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த ஆண்டு மே மாதம் பத்தாம் தேதி முதல் அடுத்த ஆண்டு மே ஒன்பதாம் தேதி வரை ஒரு தொகுதி காலியானால் அந்தத் தொகுதிக்கு ஆறு மாதங்களுக்குள் இடைத்தோ்தல் நடத்தத் தேவையில்லை என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் கூறுகள் கடந்த காலத்திலும் பின்பற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2020 ஜூன் 10-ஆம் தேதி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த ஜெ.அன்பழகன் திடீரென காலமானாா். அப்போது அந்தத் தொகுதிக்கு இடைத் தோ்தல் நடத்தப்படவில்லை.
மாறாக, 2021-ஆம் ஆண்டு சட்டப் பேரவை பொதுத் தோ்தலை அந்தத் தொகுதி சந்தித்தது குறிப்பிடத்தக்கது.