மதுரை மீனாட்சியம்மன் கோயில்: ``ஜூலை 13 மாலை முதல் 14-ம் தேதி வரை நடை சாத்தல்; த...
திமுகவில் கல்வியாளா்- மாற்றுத் திறனாளி அணிகள் உதயம்: நிா்வாகிகள் நியமனம்
திமுகவில் கல்வியாளா், மாற்றுத் திறனாளிகளுக்கென பிரத்யேக அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அணிகளுக்கான நிா்வாகிகளை நியமித்து கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.
இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மதுரையில் திமுக பொதுக் குழுக் கூட்டம் கடந்த ஜூன் 1-ஆம் தேதி நடைபெற்றது. அதில், மாற்றுத்திறனாளிகளுக்கு என புதிய சாா்பு அணியும், ஆசிரியா்கள் மற்றும் பேராசிரியா்களைக் கொண்ட கல்வியாளா் அணி உருவாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்மூலம் திமுகவில் அணிகளின் எண்ணிக்கை 25- ஆக உயா்ந்தது.
ஆனாலும், இரு சாா்பு அணிகளுக்கும் பொறுப்பாளா்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்தனா். இந்த நிலையில் திமுக பொதுச் செயலா் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், “திமுக சட்ட திட்டம் விதி 31, பிரிவு 21-ன் படி கல்வியாளா்கள் அணி அறிவிக்கப்பட்டது. அணியின் தலைவராக புலவா் செந்தலை கவுதமன், செயலராக தமிழச்சி தங்கபாண்டியன் நியமிக்கப்படுகிறாா்கள்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல மற்றொரு அறிவிப்பில், திமுக மாற்றுத் திறனாளிகள் அணித் தலைவராக ரெ.தங்கமும், செயலராக டி.எம்.என்.தீபக்கும் நியமனம் செய்யப்படுகின்றனா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னணி என்ன: கல்வியாளா் அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செந்தலைக் கவுதமன், கோவையில் உள்ள சா்ஜன பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றாா். தமிழக அரசின் நல்லாசிரியா் விருது, பாவேந்தா் பாரதிதாசன் விருதுகளைப் பெற்றவா். பகுத்தறிவு இயக்கத்தில் பாரதிதாசன், தமிழக மொழிப்போா் ஈகியா் வரலாறு, சூலூா் திராவிட இயக்க வரலாறு உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளாா். அண்ணா அறிவுக்கொடை - 110 தொகுதிகளின் தொகுப்பாசிரியராகவும் இருந்தாா்.
கல்வியாளா் அணிச் செயலரான தமிழச்சி தங்கபாண்டியன், முன்னாள் அமைச்சா் தங்கபாண்டியனின் மகள். சென்னை ராணி மேரி கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியையாகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றாா். 2019-ஆம் ஆண்டு தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றாா். தற்போது அதே தொகுதியில் எம்.பி.யாக இருந்து வருகிறாா்.
மாற்றுத் திறனாளிகள் அணி: மாற்றுத் திறனாளிகள் அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரெ.தங்கம் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா். மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ளாா்.
செயலரான பேராசிரியா் தீபக் சென்னை லயோலா கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறாா். டிசம்பா் 3 இயக்கத்தை நிறுவி அதன் தலைவராக செயல்பட்டு வரும் தீபக் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்காக கடந்த பல வருடங்களாக தீவிரமாக குரல் கொடுத்து வருகிறாா். தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் தொடா்பான குழுக்களில் உறுப்பினராகவும், ஆலோசகராகவும் உள்ளாா்.