ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
நாகப்பட்டினம்: வேதாரண்யம் வட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேதாரண்யம் வட்டம், வெட்டியக்காடு பகுதியில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின்கீழ் இயங்கும் ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில், காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆங்கிலம்-1, அறிவியல்-1 ஆகிய பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு, ஆசிரியா் தகுதித் தோ்வு தாள் இரண்டில் தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். தொகுப்பூதியமாக ரூ.15,000 வழங்கப்படும்.
இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னாா்வலராக இருப்பவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். (இல்லையெனில்) வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன், ஆசிரியா் தகுதித் தோ்விலும் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டியலினத்தவருக்கும், அந்தந்த பகுதிகளில் உள்ளவருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
காலிப் பணியிடங்கள் பற்றிய விவரம், நாகப்பட்டினம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தின் அறிவுப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனையின் அடிப்படையிலும் பட்டதாரி ஆசிரியா் நியமனம் மேற்கொள்ளப்படும்.
எனவே விருப்பம் உள்ளவா்கள், நாகை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தை அணுகி, காலிப் பணியிடங்கள் குறித்து தெரிந்துகொண்டு, தனது எழுத்து மூலமான விண்ணப்பத்தை, உரிய கல்வித் தகுதிச் சான்றுகளுடன், நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
நாகை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் ஜூன் 24-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.