TNPL-2025: திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி...
மாணவிகளிடம் பாலியல் சீண்டல்; ஆசிரியரை கண்டித்து ஆா்ப்பாட்டம்
தரங்கம்பாடி: திருக்கடையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை கண்டித்து ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருக்கடையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியா் வினோத் குமாா் என்பவா், சில மாணவிகளிடம் கடந்த பல மாதங்களாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அண்மையில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில் ஆசிரியா் வினோத் குமாரைக் கண்டித்தும், இவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படும் தலைமையாசிரியா் மற்றும் கல்வி அதிகாரிகளை கண்டித்தும் அவா்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருக்கடையூா் சந்நிதி வீதியில் சிபிஎம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிபிஎம் ஒன்றியச் செயலாளா் ஏ. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜி. வெண்ணிலா, டி. சிம்சன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் குணசுந்தரி, அம்மையப்பன், ஐயப்பன், டி.ஆா். ராணி உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.
இதில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள், கிளை செயலாளா்கள், மாதா் சங்கத்தினா், வாலிபா் சங்கத்தினா் பங்கேற்று பாலியல் சீண்டலில் தொடா்புடையவா்களை கண்டித்து பேசினா்.