மதுரை, திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்
அழகா் திருவிழா மற்றும் சித்திரை மாத பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து மதுரை மற்றும் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
அழகா் திருவிழாவை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து சனிக்கிழமை (மே 10) இரவு 11.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்: 06049) மறுநாள் காலை 7.55 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06050) மதுரையிலிருந்து மே 12-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.50 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த ரயில் தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை வழியாக மதுரை சென்றடையும்.
தாம்பரம் - திருவண்ணாமலை: சித்திரை மாத பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து மே 11-ஆம் தேதி காலை 11 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு மெமு விரைவு ரயில் (எண்: 06137) அன்று பிற்பகல் 3.30 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06138) அதேநாளில் திருவண்ணாமலையிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த ரயில் தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூா் வழியாக திருவண்ணாமலை சென்றடையும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.