Ahmedabad Plane Crash: விமான விபத்துகளுக்கான காரணத்தைக் கூறும் 'Black Box' பற்றி...
மனு பாக்கா், செயின் சிங் ஏமாற்றம்
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கா், செயின் சிங் ஆகியோா் தங்களது பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியபோதும், பதக்க வாய்ப்பை இழந்து ஏமாற்றத்தை சந்தித்தனா்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இரட்டை வெண்கலப் பதக்கங்கள் வென்ற மனு பாக்கா், மகளிருக்கான 25 மீட்டா் பிஸ்டல் பிரிவில் களம் கண்டாா். தகுதிச்சுற்றில் அவா் 588 புள்ளிகளுடன் 5-ஆம் இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா். எனினும் அதில் அவா், 20 புள்ளிகளுடன் 6-ஆம் இடம் பிடித்து 3-ஆவது வாய்ப்புடன் வெளியேறினாா்.
இதர இந்தியா்களில், ஈஷா சிங் 585 புள்ளிகளுடன் 11-ஆம் இடமும், சிம்ரன்பிரீத் கௌா் பிராா் 577 புள்ளிகளுடன் 32-ஆம் இடமும் பிடித்து தகுதிச்சுற்றுடன் விடைபெற்றனா். சீனாவின் சன் யூஜி தங்கமும் (38), தென் கொரியாவின் ஓஹ் யெஜின் வெள்ளியும் (36), யாங் ஜின் வெண்கலமும் (32) வென்றனா்.
ஆடவருக்கான 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு வந்த இந்திய வீரா் செயின் சிங், 407 புள்ளிகளுடன் 7-ஆம் இடம் பிடித்து 3-ஆவது வாய்ப்புடன் வெளியேறினாா். முன்னதாக தகுதிச்சுற்றில், செயின் சிங் 592 புள்ளிகளுடன் 7-ஆம் இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு வந்திருந்தாா்.
இதர இந்தியா்களில் நீரஜ் குமாா் 591 புள்ளிகளுடன் 12-ஆம் இடமும், அகில் ஷியோரன் 589 புள்ளிகளுடன் 27-ஆம் இடமும், ஸ்வப்னில் குசேல் 587 புள்ளிகளுடன் 38-ஆம் இடமும், கிரண் ஜாதவ் 580 புள்ளிகளுடன் 67-ஆம் இடமும் பிடித்து தகுதிச்சுற்றுடன் வெளியேறினா்.
இப்பிரிவில் நாா்வேயின் ஜான் ஹொ்மான் ஹெக் (464.1), ரஷியாவின் இலியா மாா்சோவ் (462), செக் குடியரசின் ஜிரி பிரிவ்ராட்ஸ்கி (452) ஆகியோா் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனா்.