மல்ஹர் சர்டிஃபிகேட்: இந்துக்கள் மட்டும் நடத்தும் மட்டன் கடை - திறந்துவைத்த மகாராஷ்டிரா அமைச்சர்
மட்டன் கடைகளில் விலங்குகளை வெட்டும்போது முஸ்லிம்கள் ஹலால் முறையைப் பின்பற்றுவது வழக்கமாக இருக்கிறது. அவ்வாறு ஹலால் முறையில் வெட்டப்படும் விலங்குகளின் இறைச்சிக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இத்தகைய சூழலில், முஸ்லிம்களின் மட்டன் கடைகளுக்குப் போட்டியாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த பா.ஜ.க அமைச்சர் நிதேஷ் ரானே புதிய மட்டன் கடைகளைத் தொடங்கி வைத்துள்ளார்.
மல்ஹர் தரச்சான்றுடன் இந்த மட்டன் கடைகள் தொடங்கப்பட்டுள்ளது. மல்ஹர் சான்றிதழ் பெற்ற கடைகளை இந்துக்கள் நடத்துவார்கள் என்றும், அச்சான்றிதழ் இருக்கும் கடைகளில் மட்டும் இறைச்சியை வாங்கும்படியும் நிதேஷ் ரானே தெரிவித்துள்ளார்.
அதோடு இந்து இளைஞர்களை பொருளாதார ரீதியில் முன்னேற்றும் வகையில் தொடங்கப்படும் இந்த மட்டன் கடைகளில் கலப்படம் எதுவும் இருக்காது என்றும் ரானே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரானே தனது எக்ஸ் பக்கத்தில், ``மல்ஹர் சான்று மூலம் 100 சதவீதம் சரியான மட்டன் கடைகளைத் தேர்வு செய்ய முடியும். இந்தக் கடைகள் 100 சதவீதம் இந்துக்களால் நடத்தப்படுகிறது. எனவே கூடுமான வரை மல்ஹர் சான்றிதழ் இருக்கும் கடைகளில் மட்டன் வாங்குங்கள்.
மல்ஹர் சான்றிதழ் இல்லாத கடைகளில் மட்டன் வாங்காதீர்கள். மல்ஹர் மட்டன் கடைகள் மகாராஷ்டிராவில் வாழும் இந்துக்களுக்கான முக்கியமான ஒருபடியாகும்'' என்றார்.

நிதேஷ் ரானே தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். இவரின் தந்தை நாராயன் ரானே ஆரம்பத்தில் சிவசேனாவில் இருந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சிக்குச் சென்றார். அங்கிருந்து வெளியில் வந்து தனிக்கட்சி தொடங்கி... கடைசியாக பா.ஜ.க-வில் சேர்ந்துள்ளார்.
நிதேஷ் ரானேவின் செயல்பாடும், கருத்தும் பெரும் விவாதத்தை எழுப்பியிருக்கிறது.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play