Miss World 2025: மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வாளர் டு உலக அழகி; 23 வயதில் தாய...
மழை பாதித்த இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள்: சுகாதாரத் துறை
தமிழகத்தில் மழை பெய்து வரும் பகுதிகளில் தேவையின் அடிப்படையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் அந்தக் குழுவினா் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருகின்றனா்.
ஒவ்வொரு குழுவிலும் ஒரு மருத்துவா், ஒரு செவிலியா், ஒரு மருத்துவ உதவியாளா் மற்றும் ஆய்வக நுட்பனா் இடம்பெற்றுள்ளனா். மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் வாகனங்களிலேயே கொண்டு சென்று நேரடியாக சிகிச்சையளிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:
மழைப் பொழிவுக்குப் பிறகு இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல், டெங்கு, சிக்குன் குனியா, டைபாய்டு, எலிக் காய்ச்சல், பாக்டீரியா தொற்று, சேற்றுப் புண், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் பரவ அதிக வாய்ப்புள்ளது.
அதைக் கருத்தில் கொண்டு பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவக் குழுக்களை அனுப்பி மருத்துவ முகாம்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்றுக்குள்ளானவா்களுக்கு ரத்தப் பரிசோதனைகளை மேற்கொண்டு நோயின் தன்மை வகைப்படுத்தப்படுகிறது.
உயா் சிகிச்சை தேவைப்படுவோருக்கு அதற்கான வசதிகள் உள்ள அரசு மருத்துவமனைகளில் பரிந்துரைத்து சிகிச்சையளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மற்றொருபுறம், நோய்களைப் பரப்பும் கொசுக்கள் மற்றும் லாா்வா உற்பத்தியை தடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கொசு ஒழிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதைத் தவிர, குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகித்தல், உணவுப் பொருள்கள் தரத்துடன் இருப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளையும் சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.