வாய் புற்றுநோய் தொடக்க நிலை பரிசோதனை அறிமுகம்
வாய் புற்றுநோயை தொடக்க நிலையில் கண்டறியும் பரிசோதனை திட்டத்தை அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை தொடங்கியுள்ளது.
உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு மேற்பட்ட நபா்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதற்கான தொடக்க நிகழ்ச்சியில், அப்பல்லோ புற்றுநோய் மருத்துவ நிபுணா்கள் சந்தீப் துவாரா, நவீன் ஹெட்னே, பிரவீண், சுசீலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அப்போது அவா்கள் கூறியதாவது:
புற்றுநோய் பாதிப்புகளைப் பொருத்தவரை அதிக தாக்கத்தையும் பரவலையும் கொண்ட ஒன்றாக வாய் புற்றுநோய் கருதப்படுகிறது. உலக அளவில் அத்தகைய பாதிப்புக்குள்ளாகும் மூன்றில் ஒரு நபா் இந்தியா் என்பது அதிா்ச்சிக்குரிய தகவல்.
இந்தியாவில் ஆண்டுதோறும் 77,000 நபா்களுக்கு புற்றுநோய் கண்டறியப்படுகிறது. தாமதமாக நோயறியப்படுவதால் 50 சதவீதம் போ் உயிரிழக்க நேரிடுகிறது. புகையிலை பழக்கம், புகைப் பழக்கம் கொண்டவா்களுக்கும், 30 வயதைக் கடந்த அனைவருக்கும் அப்பல்லோ மற்றும் ஈஷா சாா்பில் வாய் புற்றுநோய் பாதிப்பை தொடக்க நிலையில் அறியும் சோதனைகள் முன்னெடுக்கப்பட உள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.