ஹஜ் யாத்திரை: தனியார் நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் ஒதுக்க சவூதி ஒப்புதல்- மத்த...
மாணவர்களிடம் மதம் சார்ந்த கோஷம் : ஆளுநருக்கு எதிராக கொந்தளிக்கும் பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்கங்கள்
மதுரையில் கல்லூரி மாணவர்களை கட்டாயப்படுத்தி ஜெய் ஸ்ரீராம் கோஷமிட வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டுமென்று பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
'கல்விக்கூடங்களில் கம்பர்' என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஆளுநர் தமிழக அரசையும், திராவிட இயக்கஙகளையும் கடுமையாக விமர்சித்து பேசியவர், உரையை முடிக்கும்போது ஜெய் ஸ்ரீராம் என்று மூன்றுமுறை கோஷமிட்டு மாணவர்களையும் கோஷமிட வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஆளுநரின் செயலுக்கு பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தியாகராசர் பொறியியல் கல்லூரி ஆசிரியர்-அலுவலர் கூட்டமைப்பினர் விடுத்துள்ள அறிக்கையில், "ஏப்ரல் 11, 12 ஆகிய விடுமுறை நாட்களில் கல்லூரி நிர்வாகம் விடுமுறை விடாமல், 570 மாணவர்களையும், 45 ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி விழா அரங்கில் அமர வைத்தனர்.
செல்போன் எடுத்துச்செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை குடிநீர், ஸ்நாக்ஸ், தேநீர் வழஙகாமலும், இயற்கை உபாதைக்கு கூட வெளியே அனுமதிக்காமல் ஆசிரியர்களும் மாணவர்களும் கொடுமைக்கு ஆளாகினர். 50 ஆண்டு காலத்துக்கும் மேலான திராவிட கருத்தியலுக்கு எதிராகவும், வகுப்புவாதத்தை தூண்டும்வகையிலும், மக்களை பிளவுபடுத்தும் சனாதானத்தை வலியுறுத்தியும் ஆளுநர் பேசியுள்ளார். இறுதியில் ஆசிரியர், மாணவர்கள் அனைவரையம் கட்டாயப்படுத்தி கோஷமிட வைத்ததை வன்மையாக கண்டிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.

மதுரை காமராசர், மனோன்மனியம் சுந்தரனார், அன்னை தெரசா, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பான மூட்டா (MUTA) வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாணவர்களிடையே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். ஒரு குறிப்பிட்ட மதத்தின் கோஷத்தை எழுப்பியதுடன் மாணவர்களையும் அந்த கோஷத்தை எழுப்புமாறு வற்புறுத்தியுள்ளார்.
ஆளுநரின் சர்ச்சைக்குரிய பேச்சு மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொறுப்புமிக்க பதவியில் உள்ள ஆளுநர் ஒரு மதம் சார்ந்து பேசுவது மாணவர்களிடையே மதம் மற்றும் பிரிவினைவாதத்தை உண்டாக்கும். அது கல்விச் சூழலை பாதிக்கும். இந்திய அரசியலமைப்பின்படி நடந்து கொள்ள வேண்டிய ஆளுநர் அரசியலமைப்புக்கு முரணாக நடந்து கொண்டுள்ளார்.
ஆளுநரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். கல்வி நிலையங்களை காவி மயமாக்கும் நோக்கில் செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும்." என்று தெரிவித்துள்ளனர்.

திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் மாரப்பன் வெளியிடுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டங்கள் மசோதா-2022-ஐ தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் சட்டமாக்கும் செயலை தடுத்தார். மீண்டும் அனுப்பியபோதும் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்தி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. தற்போது உச்ச நீதிமன்றமே மசோதாக்களுக்கு சட்ட அங்கீகாரம் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசும் அரசிதழில் வெளியிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு முதல் ஆளுநர், திராவிட கோட்பாடுகளுக்கு எதிராகவும், அரசின் செயல்பாட்டுக்கு எதிராகவும் பள்ளி கல்லூரிகளில் ஆரிய சித்தாந்தத்தையும் ஆரிய கல்வியையும் புகுத்தும் வகையில் செயல்பட்டு வந்தார். ஆரிய சித்தாந்தத்தின் அடிப்படை நாதமாக இருக்கும் ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை ஒலிக்க வைத்த ஆளுநரின் செயலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது." என்று தெரிவித்துள்ளார்.
பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை சார்பாகவும் ஆளுநருக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.