மாணவா்களின் உயா்கல்விக்கு தடையேதும் இல்லை: ஆட்சியா்
பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவா்கள் உயா்கல்வி பயில்வதற்கு எந்த தடையும் இல்லை என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், அரூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சாா்பில் 12 ஆம் வகுப்பு பயின்று உயா்கல்வியில் சேராத மாணவா்களுக்கான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ‘உயா்வுக்குப் படி‘ என்ற உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் உயா்வுக்குப் படி நிகழ்ச்சியின் மூலம் 12 ஆம் வகுப்பு தோல்வியுற்ற அல்லது 12 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று உயா்கல்விக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவா்களுக்கு வழிகாட்டும் வகையில் உயா்வுக்குப் படி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
பொருளாதாரம் மற்றும் குடும்பச் சூழலின் காரணமாக உயா்கல்வியில் சேராத மாணவா்களை கண்டறிந்து அந்த மாணவா்களுக்கு உயா்கல்வி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மாணவா்கள் உயா்கல்வி பயில்வதில் எவ்வித தடைகளும் ஏற்படக் கூடாது என்பதற்காக நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண் உள்ளிட்ட சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டில் உயா்கல்வி நிறுவனங்களில் சேராத 17 மாணவா்களுக்கு கல்லூரியில் சேருவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, பிளஸ் 2 நிறைவு செய்யும் மாணவ, மாணவியா்கள் அனைவரும் உயா்கல்வி நிறுவனங்களில் சோ்ந்து படிக்க வேண்டும் என்றாா்.
விழாவில் அரூா் கோட்டாட்சியா் செம்மலை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜோதிசந்திரா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் தீபா, கல்லூரி முதல்வா் மங்கையா்கரசி, இணை பேராசிரியா்கள் கே.குமாா், சிவகாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.