இதுவரை இல்லாத பேட்டரி திறன்: ஓப்போ கே 13 டர்போ இந்தியாவில் அறிமுகம்!
மானநஷ்ட ஈடு வழக்கு! தோனி வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்குரைஞர் ஆணையர் நியமனம்!!
சென்னை: நூறு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கோரி தாக்கல் செய்த வழக்கில், முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்குரைஞர் ஆணையரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி, 2014-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், ஐபிஎல் சூதாட்ட வழக்கு தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில் தனக்கு எதிராக அவதூறு கருத்துகள் கூறியதாக, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், ஜீ மீடியா கார்ப்பரேஷன், இந்தி செய்தி தொலைக்காட்சியான நியூஸ் நேஷன் நெட்வொர்க் பிரைவேட் லிமிட்டெட் ஆகியோருக்கு எதிராக, நூறு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தோனி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வழக்கில் சாட்சி விசாரணையை தொடங்க வேண்டும். அதற்கு வாக்குமூலம் அளிக்க முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளார்.
பிரபலமானவர் என்பதால், தோனி, நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க நேரில் ஆஜரானால் குழப்பங்கள் ஏற்படும். எனவே, தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்குரைஞர் ஆணையரை நியமிக்க வேண்டும். அக். 20- ஆம் தேதியில் இருந்து டிச.10-ஆம் தேதிக்குள், அனைத்து தரப்பினரின் வசதிக்கு ஏற்ற ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்தால், அங்கு வாக்குமூலம் அளிக்க தயார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஏற்று, தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்குரைஞர் ஆணையரை நியமித்த நீதிபதி, உயர்நீதிமன்றத்தின் பட்டியலில் இருந்து வழக்கறிஞர் ஆணையரை தேர்வு செய்வதாக தெரிவித்தார். தோனியின் வாக்குமூல பதிவுக்குப் பின், வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என நீதிபதி தெரிவித்தார்.