இதுவரை இல்லாத பேட்டரி திறன்: ஓப்போ கே 13 டர்போ இந்தியாவில் அறிமுகம்!
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் `எழுத்தாளர் மேடை'; படைப்புகளை வாசகர்களிடம் கொண்டு செல்லும் முயற்சி!
மதுரை நகரில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்களை ஈர்த்திருக்கிறது `கலைஞர் நூற்றாண்டு நூலகம்'.
மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் 2010-ல் சென்னையில், `அண்ணா நூற்றாண்டு நூலகம்' தமிழக அரசால் திறக்கப்பட்டது.
அதேபோல, கடந்த 2023-ல் கலைஞரின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில், மதுரையில் `கலைஞர் நூற்றாண்டு நூலகம்' அரசால் திறக்கப்பட்டது.
3 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்நூலகத்தை 2023 ஜூலை 15-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்திருந்தார்.

இந்நூலகத்தில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கிறது.
குழந்தைகளுக்கான பிரிவு, போட்டித் தேர்வு நூல்கள் பிரிவு, ஆங்கிலப் பிரிவு, தமிழ் பிரிவு, கலைஞர் பிரிவு, ஆங்கில குறிப்புதவி நூல்கள் பிரிவு என 6 தளங்களும், ஆய்வாளர் அரங்கம், செஸ் அரங்கம், பார்வை மற்றுத் திறனாலிகளுக்கான சதுரங்க பயிற்சி மையம் உள்ளிட்ட அரங்குகளும் உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் இங்கு வந்த 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்களில், சுமார் ஒன்றரை லட்சம் பேர் குழந்தைகள், 27,000 பேர் கல்லூரி மாணவர்கள்.
அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நூற்றுக்கணக்கானோர் நாள்தோறும் இங்கு வந்து நேரத்தைச் செலவிடுகின்றனர்.
அனைவருக்கும் வாசிப்பை மேம்படுத்தும் வழிமுறைகள், புத்தகத் தேர்வுகள், அறிவை விரிவாக்கும் நடைமுறைகள் பற்றிய சிறப்பு அமர்வுகளும் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில், `எழுத்தாளர் மேடை' என்ற பெயரில் புதிய நிகழ்ச்சி இந்நூலகத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது.
எந்த வயது எழுத்தாளராக இருந்தாலும், தங்களின் படைப்புகளை மதுரை மக்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாக இது அமைந்திருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள், வெளியிடப்படாத தங்களின் படைப்புகளையும் நேரடியாக வாசகர்களிடம் கொண்டு சேர்க்கலாம்.

இந்நூலகம் பற்றி நம்மிடம் பேசிய தலைமை நூலகர் தினேஷ்குமார், "வாரந்தோறும் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள், வாசிப்பு ஊக்குவிப்பு பணிகள், விவாதங்கள், பயிற்சிகள், திரையிடல்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இவை குழந்தைகளை வாசிப்பு பழக்கத்திற்கு ஈர்க்கின்றன.
மதுரையின் கலைஞர் நூற்றாண்டு நூலகம், இன்று கல்வி மையமாகவும் அறிவுப்பரிமாற்ற ஒரு மையமாகவும் திகழ்கிறது.
இது வெறும் வாசிப்பை மட்டுமல்லாது, அறிவைப் பகிரும், அனைவரையும் இணைக்கும், நகரின் முக்கியமான அடையாளமாக மாறியுள்ளது" என்று கூறினார்.
அவரைத்தொடர்ந்து, அங்கு வந்திருந்த பெற்றோர்களிடமும் குழந்தைகளிடமும் பேசுகையில், "வார கடைசினா குழந்தைகளை இங்க கூட்டிட்டு வந்துருவோம்.
குழந்தைகளை இந்த மாதிரி புக்ஸ் படிக்க வைக்கிறதும், அறிவியல்பூர்வமான விஷயங்களை எக்ஸ்பீரியன்ஸ் பண்ணி பார்க்கக்கூடிய லேப்ல டைம் ஸ்பென்ட் பண்ண வைக்கிறதும் எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.
முக்கியமாக, குழந்தைகளுக்கு இதனால மொபைல், டிவி ஸ்கிரீன் டைம் கம்மி பண்ண முடியுது ” என்றனர் தன் குழந்தையுடன் வந்திருந்த பெற்றோர் கதிர், வனிதா.

அதேபோல், ஆறாம் வகுப்பு படிக்கும் விக்னேஷ், ருத்ரா, குகன் ஆகிய மாணவர்கள், "இங்க பேட்மேன் காமிக் புக்ஸ் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
இங்க, பொம்ம படம் போட்ட எல்லா புக்ஸ் நாங்க படிச்சிட்டு போவோம். எங்களுக்கு இங்க ரொம்ப ஜாலியா இருக்கு” என்று விளையாடிக்கொண்டே நம்மிடம் கூறுகிறார்கள்.