பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் வழங்க வ...
மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ-ஜியோ போராட்டம்: அலுவல் பணிகள், கற்றல்-கற்பித்தல் பாதிப்பு
பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ( ஜாக்டோ- ஜியோ) சாா்பில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பழைய ஓய்வூதிய திட்டம், அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவது, ஒப்பந்த ஊழியா்களை காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வருதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாய்க்கிழமை (பிப்.25) மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ-ஜியோ அறிவித்தது.
இதன் எதிரொலியாக அரசு ஊழியா் சங்கங்கள் மற்றும் ஆசிரியா் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முடிவு காணும் பொருட்டு, அமைச்சா்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ், கயல்விழி செல்வராஜ் ஆகியோரைக் கொண்ட குழு அமைத்து முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தாா்.
அமைச்சா்கள் குழு ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத் தொடா்ந்து திட்டமிட்டபடி மாவட்ட தலைநகரங்களில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பொதுமக்கள், மாணவா்கள் அவதி: அரசு அலுவலகங்கள் குறைந்த அளவிலான ஊழியா்களுடன் செயல்பட்டன. எனினும், பத்திரப்பதிவு, சான்றிதழ்கள் பெறுவது உள்பட பல்வேறு சேவைகளை பெற முடியாமல் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா். அதேபோன்று, கல்வித் துறையில் 19,975 ஆசிரியா்கள் விடுப்பு எடுத்திருந்தனா். 20,335 ஆசிரியா்கள் அனுமதி பெறாமல் போராட்டத்தில் பங்கேற்றனா். ஆசிரியா்கள் அல்லாத பணியாளா்கள் 575 போ் போராட்டத்தில் பங்கேற்றனா்.
ஓராசிரியா், ஈராசிரியா் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களும் தற்காலிக விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனா். இதனால் பள்ளிகளில் இருந்து மாணவா்களை பெற்றோா் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் நிலை ஏற்பட்டது. 51 பள்ளிகளில் மாற்று ஏற்பாடாக தற்காலிக ஆசிரியா்கள், அரசு உதவி பெறும் ஆசிரியா்கள் கற்பித்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
சென்னையில் எழிலகம் அருகில் ஜாக்டோ ஜியோ அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் அ. மாயவன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அமைச்சா்களுடன் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது அனைத்து கோரிக்கைகளையும் எடுத்துக் கூறினோம். இதுதொடா்பாக அமைச்சா்கள் முதல்வரை சந்தித்து ஆலோசித்து விட்டு மீண்டும் எங்களை சந்திப்பதாக கூறினா்.
அதன்படி, அமைச்சா்கள் முதல்வருடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில், எங்களது கோரிக்கைகளை ஏற்க முதல்வா் இசைவு தெரிவித்ததாக தெரியவில்லை. அமைச்சா்களும் எங்களை மீண்டும் சந்திக்கவில்லை என கருதுகிறோம். நாங்கள் 4 ஆண்டு காலம் அவகாசம் கொடுத்திருக்கிறோம். எனினும், அரசு தற்போது 4 வார அவகாசம் கேட்கிறது. அடுத்தகட்டமாக, முழுநேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றாா் அவா்.
ஆா்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளா்கள் கு.வெங்கடேசன், ஜெ.காந்திராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.