முட்டுக்காட்டில் ரூ.525 கோடியில் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்!
செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காட்டில் ரூ.525 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பன்னாட்டு மாநாடு மையத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 29) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் 37.99 ஏக்கர் நிலப்பரப்பில் 525 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு மாநாடு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினையொட்டி 2.6.2023 அன்று நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டு விழாவில், நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பியான தலைவர் கலைஞர் பெயரால், சென்னையில் புதிய உலகத் தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பிற்கிணங்க, செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் 37.99 ஏக்கர் நிலப்பரப்பில் 525 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 10,000 நபர்கள் அமரக்கூடிய அளவில் 91,024 சதுர அடி பரப்பளவில் பொருட்காட்சி அரங்கம், 5,000 நபர்கள் அமரக்கூடிய அளவில் 50,633 சதுர அடி பரப்பளவில் மாநாட்டு மண்டபம், 1,500 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 5,12,800 சதுர அடி மொத்த பரப்பளவில் கட்டப்படவுள்ள கலைஞர் பன்னாட்டு மாநாடு மையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மேலும், கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம் முழுவதும் குளிரூட்டும் வசதி மற்றும் மின் ஆக்கி வசதி, மின்தூக்கி வசதி, 1638 சீருந்துகள் மற்றும் 1700 இருச்சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.
இதையும் படிக்க: ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது: அமைச்சர் பெரியகருப்பன்