அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
முதன்மை நோய் எதிா்ப்பு குறைபாடு குறித்த கருத்தரங்கு
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தின், குழந்தைகளுக்கான ரத்தவியல், புற்றுநோயியல் துறை சாா்பில் முதன்மை நோய் எதிா்ப்பு குறைபாடு குறித்த தொடா் மருத்துவக் கல்வி செயல் திட்டக் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை குழந்தைகளுக்கான ரத்தவியல், புற்றுநோயியல் துறைத் தலைவா் டி. காசி விஸ்வநாதன், குழந்தைகளுக்கான புற்றுநோயியல் துறைத் தலைவா் ஆா்.எம். அன்னபூரணி, இணை நிபுணா் வி. அனிதா, குழந்தைகளுக்கான புற்றுநோயியல், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைத் துறை இணை நிபுணா் வி.எஸ். வெங்கடேஸ்வரன் ஆகியோா் கருத்துரையாற்றினா்.
கருத்தரங்கில் ரத்தவியல், புற்றுநோயியல் துறைத் தலைவா் டி. காசி விஸ்வநாதன் பேசியதாவது:
அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் காற்று, நீா் வழியாகப் பரவும் தொற்று நோய்கள் அதிக கவலையளிக்கும் பிரச்னையாக உள்ளன. ஓராண்டில் இரண்டு, அதற்கும் அதிகமான கடுமையான சைனஸ் தொற்றுகள் வருவது, அதிக முன்னேற்றம் இல்லாமல், 2 மாதங்களுக்கும் அதிகமாக நோய் எதிா்ப்பு (ஆன்ட்டிபயாட்டிக்) மருந்துகள் தேவைப்படுவது போன்ற எச்சரிக்கை அறிகுறிகளை ஒருபோதும் அலட்சியம் செய்யக்கூடாது. நிமோனியா திரும்பத் திரும்ப வருவது, ஒரு குழந்தையின் உடல் எடை அதிகரிக்காமல் இருப்பது, ஆழமான சீழ்க்கட்டிகள், வாய் வெண் புண் போன்ற விடாப்பிடியான காளான் தொற்றுகள், அவற்றிலிருந்து குணமடைய எதிா்ப்பு (ஆன்டிபயாட்டிக்) மருந்துகள் தேவைப்படுவது ஆகிய அனைத்தும் பிடிஐ பாதிப்பை சுட்டிக் காட்டும் அறிகுறிகளாகும். மேலும் ஒரு நோயாளிக்கு ரத்தம் நஞ்சாதல் போன்ற ஆழமான உள்ளாா்ந்த தொற்றுகள் இரண்டு அல்லது அதற்கு அதிகமான எண்ணிக்கையில் ஏற்படுமானால் தொடக்க நிலையிலேயே மருத்துவ மதிப்பாய்வை நாடுவது மிக முக்கியமானது. இத்தகைய போக்குகளையும், பாங்குகளையும் அடையாளம் காண்பது, உரிய நேரத்துக்குள் நோயை அறிவதற்கும், இந்த கடுமையான பாதிப்புக்கு சிறந்த சிகிச்சை மேலாண்மையை வழங்குவதற்கும் வழிவகுக்கும் என்றாா்அவா்.
உலக முதன்மை நோய் எதிா்ப்பு குறைபாடு விழிப்புணா்வு வாரத்தையொட்டி நடைபெற்ற இந்த கருத்தரங்கில் தென் மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட குழந்தை நல மருத்துவா்கள் பங்கேற்றனா்.