முதல்வருக்கு பாராட்டு விழா: கோவி. செழியன் அறிவிப்பு!
தமிழக உயர்கல்வித் துறை சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வருகிற மே 3 ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்படும் என அமைச்சர் கோவி. செழியன் பேரவையில் அறிவித்துள்ளார்.
துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மீட்டெடுத்து மாநில சுயாட்சியை உறுதிப்படுத்திய முதல்வருக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மே 3 ஆம் தேதி மாலை 4 மணிக்கு பாராட்டு விழா நடைபெறும் என்று கூறியுள்ளார்.
"உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை பெற்றுத்தந்து தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான உரிமைகளை பெற்றுத்தந்துள்ள முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என பல்கலைக்கழக வேந்தர்கள், துணை வேந்தர்கள், கல்வியாளர்கள், கல்லூரியின் கூட்டமைப்பினர், கல்லூரி மாணவர்கள் விருப்பம் தெரிவித்தனர். அதற்கு முதல்வர் இசைவு தெரிவித்துள்ளார்.
அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மே 3 ஆம் தேதி மாலை 4 மணிக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்த நிலையில் 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாகக் கருதப்படும் என்று சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவும் இதில் அடங்கும். அதன்படி பல்கலைக்கழக வேந்தராக இனி முதல்வர் ஸ்டாலின் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | 'பயங்கரவாதம் வேண்டாம்; அமைதி வேண்டும்!' - ஜம்மு-காஷ்மீர் மாணவிகள் பேரணி!