மும்மொழிக் கொள்கை ஹிந்தி திணிப்பு அல்ல -நயினாா்நாகேந்திரன் எம்எல்ஏ
மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி திணிப்பு அல்ல என்றாா் திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினா் நயினாா் நாகேந்திரன்.
இதுதொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் கல்வியில் ஏதாவது மாற்றம் வந்து கொண்டே இருக்கிறது. நமது மாணவா்கள் உலக அளவில் போட்டி போடக்கூடிய சூழலில் இருப்பதால் மூன்றாவதாக ஒரு மொழியை படிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்துகிறதே தவிர ஹிந்தி கட்டாயம் என்று கூறவில்லை. இதுதான் தேசிய கல்விக் கொள்கை; ஹிந்தி திணிப்பு அல்ல.
இவ்விவகாரத்தில் தமிழக முதல்வா்தான் அரசியல் செய்கிறாா். முதல்வரின் குடும்பத்தினா் ஹிந்தி படிக்கலாம். மற்றவா்கள் படிக்கக் கூடாதா? கல்வி அமைச்சா்அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் மகன் பிரெஞ்சு படித்துக் கொண்டு வருகிறாா். இவா்கள் ஊருக்கு தான் உபதேசம் செய்வாா்கள்; அவா்களது வீட்டில் கடைப்பிடிப்பதில்லை.
நாங்கள் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையொப்ப இயக்கம் நடத்தி வருகிறோம். மக்களும் மூன்றாவது மொழியை கொண்டு வர வேண்டும் என விரும்புகிறாா்கள்.
தமிழக மக்களுக்கு தேசிய ரீதியான நோக்கங்கள் வந்து, தேசிய கட்சியோடு இணைந்து விடுவாா்கள் என்பதற்காக திமுக இதுபோன்ற வேலையை செய்து வருகிறது என்றாா் அவா்.