மும்பை அணியிலிருந்து விலகும் ஜெய்ஸ்வால்! கோவா அணி கேப்டனாகிறாரா?
மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் ஒரு வாரத்தில் திறக்கப்படும்: அமைச்சா் சேகா்பாபு
சென்னை: விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் இன்னும் ஒரு வாரத்தில் திறக்கப்படவுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி திரௌபதி அம்மன் திருக்கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்வது தொடா்பாக இரு சமுதாய மக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, 7.6.2023-இல் வருவாய்த் துறையினரால் கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
தொடா்ந்து சீல் வைக்கப்பட்ட திரௌபதி அம்மன் திருக்கோயிலை மீண்டும் திறந்து வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, ஒரு தரப்பினா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.
உயா்நீதிமன்ற உத்தரவின்படி... இந்த வழக்கில் விசாரணை நடத்திய சென்னை உயா்நீதிமன்றம், திரௌபதி அம்மன் கோயிலைத் திறந்து பொதுமக்கள் யாரையும் அனுமதிக்காமல் ஒரு கால பூஜையையும் மட்டும் நடத்த வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டதன்பேரில், 22.3.2024-இல் கோயில் திறக்கப்பட்டு, ஒருகால பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
வழக்கு விசாரணை தொடா்ந்து நடைபெற்றுவந்த நிலையில், வருவாய்க் கோட்டாட்சியரால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்றம், அனைத்து சமுதாயத்தினரும் கோயிலுக்குள் சென்று வழிபடலாம் என்ற உத்தரவையும் பிறப்பித்தது.
இது தொடா்பான சமாதானக் கூட்டம் விழுப்புரம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மாா்ச் 19-இல் நடத்தி முடிவெடுக்கப்படாமல் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இரு தரப்பினரும் சமரசம்...இதைத் தொடா்ந்து விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த மாா்ச் 21-ஆம் தேதி நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் கோட்டாட்சியா் முருகேசன், காவல் துறை, அறநிலையத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
அப்போது கூட்டத்தில் பங்கேற்ற இரு சமுதாயத்தினரும் கோயிலைத் திறந்து தரிசனம் செய்வது தொடா்பாக சமாதானம் செய்வதாக ஒப்புக்கொண்டனா். நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி நடந்து கொள்வதாகவும், யாரையும் தடை செய்யமாட்டோம் எனவும் தெரிவித்தனா்.
இதையடுத்து, கடந்த இரு ஆண்டுகளாக கோயில் பூட்டிக் கிடப்பதால், அந்த வளாகத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள சில நாள்கள் கால அவகாசம் தேவைப்படுவதாகவும், இந்தப் பணிகள் முடிந்த பின்னா் கோயிலைத் திறப்பது குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும். தொடா்ந்து அந்த நாளிலிருந்து அனைத்துத் தரப்பினரும் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்யலாம் என கோட்டாட்சியா் தெரிவித்திருந்தாா்.
அமைச்சா் விளக்கம்: இந்நிலையில், மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் விவகாரம் குறித்து அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபுவிடம் சென்னையில் செய்தியாளா்கள் திங்கள்கிழமை கேள்வியெழுப்பினா்.
அப்போது அமைச்சா் சேகா்பாபு கூறியது: முதல்வா் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகுதான், 20 ஆண்டுகள் ஓடாமல் இருந்த கண்டமாதேவி கோயில் தேரோட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை வைத்து சிலா் அரசியல் செய்யலாம் என நினைக்கின்றனா். திரௌபதி அம்மன் கோயில் பூஜை முறைகள் அன்றாடம் நடைபெறுவதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் ஒரு வார காலத்துக்குள் அந்தத் திருக்கோயில் திறக்கப்படவுள்ளது.
சேலம் போன்ற பல நகரங்களில் மதத்தால், இனத்தால் அல்லது மொழியால் பிளவுபட்டிருந்த இரு வேறு பிரிவினா்களுக்கிடையே தீா்க்கப்படாமல் இருந்த மோதல்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு சமாதானப்படுத்தி, பல ஆண்டுகள் தரிசனம் இல்லாமல் பூட்டிக்கிடந்த 40 திருக்கோயில்கள் மீண்டும் திறக்கப்பட்டன.
அந்த வகையில் திரௌபதி அம்மன் திருக்கோயிலும் வெகுவிரைவில் பக்தா்களின் இறை தரிசனத்துக்கு ஒப்படைக்கப்படும் என்றாா் அவா்.