ஆப்கன் - ஆஸி. போட்டிக்கு பாதிப்பா? 3-வது வெற்றி முனைப்பில் மழை!
மொழிப் போரில் தமிழ்நாடு போராடும்.. தமிழ்நாடு வெல்லும்! -முதல்வர் ஸ்டாலின்
மொழிப் போரில் தமிழ்நாடு போராடும்.. தமிழ்நாடு வெல்லும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “பொதுவாக நான் பிறந்தநாளை பெரிய அளவில் ஆடம்பரமாக கொண்டாடுவதில்லை. ஆனால் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்குவது, திமுக அரசின் சாதனைகளை, கொள்கைகளை எடுத்துரைக்க பொதுக்கூட்டங்கள் நடத்துவார்கள். ஆனால் இந்த முறை என்னுடைய பிறந்தநாள் வேண்டுகோளாக என் உயிரோடு கலந்திருக்கும் உடன்பிறப்புகளுக்கு கோரிக்கை வைக்கிறேன்.
இன்றைக்கு தமிழ்நாடு தன்னுடைய உயிர் பிரச்னையான மொழிப் போரையும், தன்னுடைய உரிமை பிரச்னையான தொகுதி மறுசீரமைப்பும் எதிர்கொண்டிருக்கிறது. இதனுடைய உண்மையான நோக்கத்தை நீங்கள் கொண்டு சேர்க்க வேண்டும்.
தொகுதி மறுசீரமைப்பு என்பது நம் மாநிலத்தின் சுயமரியாதை, சமூகநீதி, நம்முடைய சமூகநல திட்டங்களை பெரிதும் பாதிக்கும். இதை நீங்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் மாநிலம் காக்க எழுந்து நிற்க வேண்டும்.
இந்தியாவுக்கே வழிகாட்டியாக நம்முடைய போராட்டத்தை தொடங்க வேண்டும். இப்போது கர்நாடகம், பஞ்சாப், தெலங்கான போன்ற மாநிலங்களில் இருந்து நமக்கான ஆதரவு குரல் வந்துள்ளது. இதைப் பார்த்து மத்திய அரசு ஹிந்தியை திணிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டு அதற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறது.
மும்மொழிக்கொள்கையைக் ஏற்காததால் நம்முடைய நிதியும் இன்னும் தரவில்லை. தமிழ்நாட்ட்டுக்கான தொகுதிகளைக் குறைக்க மாட்டோம் என்று கூறும் மத்திய அரசு, மற்ற மாநிலங்களில் எண்ணிக்கை அதிகரிப்பதைப் பற்றி எதையும் கூறவில்லை.
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரிக்காதீர்கள். நாட்டின் வளர்ச்சி அடிப்படையில் நாட்டின் மக்கள்தொகையை கட்டுப்படுத்திய தென்மாநிலங்களைத் தண்டிக்காதீர்கள். அப்படி நடந்தா தமிழ்நாடும் திமுகவும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
தமிழ்நாட்டுக்காக ஒன்றுபட்டு போராடும்.. தமிழ்நாடும் போராடும்.. தமிழ்நாடு வெல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மத்திய அரசு திட்டமிட்டபடி தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்றும், 39 தொகுதிகள் 31 ஆக மாறும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரே இலக்கு!
— M.K.Stalin (@mkstalin) February 28, 2025
தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!#FairDelimitationForTNpic.twitter.com/zQ1hMIHGzo