யார் இந்த ஞானேஷ் குமார்? ஜம்மு - காஷ்மீர், அயோத்தி விவகாரங்களில் முக்கிய பங்காற்றியவர்...
புதிதாக நியமிக்கப்பட்டு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், உள்துறை அமைச்சகத்தின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் திறம்படச் செயலாற்றியுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்றுடன் ஓய்வுபெற்ற நிலையில், நாளை ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்கவுள்ளார்.
புதிய தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் ஆலோசனைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், தேர்தல் ஆணையராக உள்ள ஞானேஷ் குமாரை தலைமைத் தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று நேற்றே அறிவிப்பும் வெளியானது.
ஞானேஷ் குமார் யார்?
1988-ஆம் ஆண்டு கேரள மாநில ஐஏஎஸ் கேடராக தேர்வானவர் ஞானேஷ் குமார். ஐஐடி கான்பூரில் பி.டெக்., அமெரிக்காவின் ஹார்வர்டில் சுற்றுச்சூழல் பொருளாதாரம், இந்திய பட்டய நிதி ஆய்வாளர்கள் நிறுவனத்தில் வணிக நிதி உள்ளிட்ட படிப்புகளை படித்துள்ளார்.
எர்ணாகுளம் உதவி ஆட்சியராக பணியைத் தொடங்கி ஞானேஷ் குமார், கேரள மாநில எஸ்சி/எஸ்டி மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர், கொச்சி மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.
மேலும், கேரள அரசின் நிதி வளங்கள், பொதுப்பணித் துறைகளின் செயலாளராக பணியாற்றியுள்ளார்.
இதையடுத்து பாதுகாப்பு மற்றும் உள்துறை இணைச் செயலாளராக பணியாற்றியுள்ளார். மேலும், உள்துறையின் கூடுதல் செயலாளராகவும், நாடாளுமன்ற விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
ஜனவரி 31, 2024 அன்று ஓய்வுபெற்ற ஞானேஷ் குமார், கடந்தாண்டு தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இதையும் படிக்க : நள்ளிரவில் தேர்தல் ஆணையர் நியமனம் அவமரியாதைக்குரியது: ராகுல் காந்தி
ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு, அயோத்தி விவகாரம்
மத்திய அரசின் முடிவுகளை வெற்றிகரமாக செயல்படுத்தும் ஞானேஷ் குமாரின் திறமை, அமித் ஷாவுடன் நெருக்கமானவர் ஆக்கியது.
உள்துறை அமித் ஷாவின் கீழ் உள்துறையின் இணைச் செயலாளர், கூடுதல் செயலாளர் மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர் பதவிகளை வகித்துள்ளார்.
இவர் உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக பணியாற்றியபோது ஜம்மு - காஷ்மீர் விவகாரங்களை கவனித்து வந்தார். அப்போதுதான் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது.
சட்டப்பிரிவு 370 ரத்து, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கை பிரித்து யூனியன் பிரதேசமாக மறுசீரமைப்பு செய்யும் மசோதாக்களை உருவாக்கும் பொறுப்பு ஞானேஷ் குமாரிடம் மோடி அரசு வழங்கியது.
மிகவும் ரகசியமாக எந்த தகவலும் வெளியே கசியாமல் அந்தப் பணியை வெற்றிகரமாக செய்து முடித்ததார்.
அதேபோல், அயோத்தி ராமர் கோயிலை நிர்வகிக்கும் ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அமைப்பதிலும் ஞானேஷ் குமார் முக்கியப் பங்காற்றினார்.