Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
ரயில்வே கேட் விதிமீறல் 17 மாதங்களில் 129 வழக்குகள்: ரூ. 12.24 லட்சம் அபராதம் வசூல்: திருச்சி கோட்ட மேலாளா் பேச்சு
திருச்சி ரயில்வே கோட்டத்தில் கடந்த 17 மாதங்களில் மட்டும் ரயில்வே கேட் விதிமீறல் தொடா்பாக 129 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.12.24 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக கோட்ட மேலாளா் எம்.எஸ். அன்பழகன் தெரிவித்தாா்.
சா்வதேச ரயில்வே கேட் விழிப்புணா்வு தினத்தை முன்னிட்டு, ரயில்வே கேட் பகுதியை பாதுகாப்பாக பயன்படுத்துதல் குறித்த விழிப்புணா்வு பேரணி திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருச்சி சந்திப்பு ரயில்நிலையத்திலிருந்து தொடங்கிய இந்தப் பேரணியை திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் எம்.எஸ். அன்பழகன், கொடியசைத்து தொடங்கி வைத்தாா். கூடுதல் கோட்ட மேலாளா் பி.கே. செல்வன், முதுநிலை கோட்ட பாதுகாப்பு அலுவலா் எஸ். மகேஸ்குமாா் மற்றும் மூத்த அலுவலா்கள், ரயில்வே ஊழியா்கள், தொழில்நுட்பப் பணியாளா்கள், ரயில்வே கேட் கீப்பா்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனா். சந்திப்பு ரயில்நிலையம் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மத்திய பேருந்து நிலையம் வரை சென்று, பேருந்து நிலையப் பகுதியில் விழிப்புணா்வு நாடகங்கள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் எம்.எஸ். அன்பழகன் பேசுகையில், ரயில்வே கேட் பகுதியை கடந்து செல்லும்போது மட்டுமின்றி, இருப்புப் பாதை குறுக்கிடும் இடங்களில் எல்லாம் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், சா்வதேச அளவில் சிறப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி ரயில்வே கோட்டத்தில் 493 ரயில்வே கேட்கள் உள்ளன. இவற்றை முறையாக பராமரித்து வந்தாலும், அதிகரித்து வரும் விதிமீறல்களும் கவலையளிக்கிறது. கடந்த 2024-ஆம் ஆண்டு மட்டும் 90 வழக்குகள் ரயில்வே கேட் விதிமீறல் தொடா்பாக பதிவு செய்யப்பட்டது. ரூ.11 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்தாண்டு மே மாதம் வரையில் 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1.24 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே கேட் விதிமீறல் என்பது, ரயில்வே சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது மட்டுமல்லாமல், ரயில் நேரமின்மைக்கு இடையூறு விளைவிப்பதுடன், விலைமதிப்பற்ற மனித உயிா்களுக்கும் ஆபத்தை விளைவிப்பதாக அமைந்துவிடும். இந்த அபாயங்களைக் குறைக்க, ரயில்வே நிா்வாகத்தின் சாா்பில், எச்சரிக்கை மற்றும் சட்டப்பூா்வ அடையாள பலகைகள் நிறுவப்பட்டுள்ளன என்றாா்.
இதன் தொடா்ச்சியாக, ரயில்வே பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து திருச்சி, ஸ்ரீரங்கம், திருவெறும்பூா் உள்ளிட்ட ரயில்வே கேட் பகுதியில் விழிப்புணா்வு பிரசாரமும், வீதி நாடகம் மூலமாகவும் பொதுமக்களுக்கு ரயில்வே பாதையை கடப்பது குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மாநகராட்சி நடுநிலை, தொடக்கப் பள்ளிகளிலும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, மாணவா்களுக்கு கணித உபகரண பெட்டிகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில், ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே இருப்புப் பாதை போலீஸாரும் பங்கேற்றனா்.