`ராக்கி கயிறு; சகோதரி’ - கணவன் கொலையில் பங்கு இருப்பதை ஒப்புக்கொண்ட சோனம்; சகோதரர் சொல்வதென்ன?
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ராஜா ரகுவன்சியும், சோனம் என்பவரும் கடந்த மாதம் 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த 10 நாட்கள் கழித்த நிலையில் இரண்டு பேரும் மேகாலயாவிற்கு தேனிலவு சென்றனர். ஆனால் கடந்த மாதம் 23-ம் தேதி இருவரும் திடீரென காணாமல் போய்விட்டனர். அதனை தொடர்ந்து கடந்த இரண்டாம் தேதி ராஜா ரகுவன்சியின் உடல் மட்டும் மீட்கப்பட்டது.
சோனம் என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் தான் கடந்த 8-ம் தேதி சோனம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசிப்பூர் போலீஸ் நிலையத்தில், `தனக்கு உடல் நிலை சரியில்லை’ என்று கூறி சரணடைந்தார். அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி இக்கொலையில் தொடர்புடைய சோனம் காதலன் ராஜ் குஷ்வாஹா மற்றும் கூலிப்படையை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோனமை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் சோனம் தனது கணவன் கொலையில் தனக்கு பங்கு இருப்பதாக ஒப்புக்கொண்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுப்பது இந்திய சட்டப்படி செல்லுபடியாகும் என்றாலும், நீதிபதி முன்பு வாக்குமூலம் கொடுப்பதுதான் முறைப்படி செல்லுபடியாகும். போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துவிட்டு நீதிபதியிடம் வாக்குமூலத்தை மாற்றிக்கொள்ளும் சம்பவங்களும் நடக்கிறது. சோனம் இப்போது போலீஸாரிடம் தனது கணவன் கொலையில் தனக்கு பங்கு இருப்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
தனித்தனியே வந்த கொலையாளிகள்
ராஜாவை கொலை செய்த கூலிப்படையினர் ஆகாஷ், ஆனந்த், விகாஷ் ஆகியோர் ஒரே நேரத்தில் ஷில்லாங் செல்லாமல் தனித்தனியாக அங்கு போய் சேர்ந்துள்ளனர் என்று சிறப்பு விசாரணை குழு தெரிவித்துள்ளது. மூன்று பேரும் சோனம் மற்றும் ராஜாவுடன் சக சுற்றுலா பயணிகள் போல் ஒன்று சேர்ந்து கொண்டு அவர்களுடன் பயணம் செய்துள்ளனர். சோனமும், ராஜாவும் மலையில் 2000 படிக்கட்டுகள் ஏறிய நிலையில் கொலையாளிகள் மூன்று பேரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.
சிறிது நேரத்தில் சோனம் தனக்கு சோர்வாக இருப்பதாக கூறி மெதுவாக நடக்க ஆரம்பித்தார். குறிப்பிட்ட இடம் வந்ததும் பின்னால் இருந்து கொண்டு தனது கூட்டாளிகளிடம் கொலை செய்யும்படி உத்தரவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

சோனம் சகோதரர் கோவிந்த் ராஜாவின் குடும்பத்தினரை சந்தித்து தங்களது சகோதரியை தூக்கிலிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கோவிந்த் அங்கு சென்ற போது ராஜாவின் தாயார் உமா அழுதபடி இருந்தார். அவரை கட்டியணைத்து கோவிந்த் ஆறுதல் கூறியபோது அவரும் அழுதார்.
பின்னர் கோவிந்த் கூறுகையில்,''நான் ராஜா குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சோனத்துடனான உறவை எங்களது குடும்பம் துண்டித்துக்கொண்டுள்ளது. சோனம் குற்றவாளி என்றால் அவர் தூக்கிலிடப்படவேண்டும். ராஜ் குஷ்வாஹா எப்போதும் சோனத்தை சகோதரி என்றுதான் அழைப்பார். அதோடு ராஜ் மூன்று ஆண்டுகள் சோனத்திற்கு ராக்கி கயிறும் கட்டி இருக்கிறார். சோனம் எனக்கு போன் செய்து தான் ஹோட்டலில் நிற்பதாக அழுது கொண்டே தெரிவித்தார்.
உடனே நான் போலீஸாரை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தேன். சோனத்தை ராஜாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் செய்தபோது சோனம் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார். ராஜாவுடன் இரண்டு மாதம் ஷாப்பிங் சென்றார். சோனம் எங்களது தாயாரிடம் ராஜ் குஷ்வாஹாவை காதலிப்பது குறித்து முன்கூட்டியே தெரிவித்ததாக வெளியான செய்தியில் உண்மையில்லை'' என்று தெரிவித்தார். இது குறித்து ராஜாவின் தாயார் உமா கூறுகையில், ''இதில் கோவிந்த் தரப்பில் எந்த வித தவறும் இல்லை. சோனத்தை தூக்கிலிட வேண்டும்" என்று கண்ணீர் விட்டு கூறினார்.