PMK : தைலாபுரத்தில் நடந்த 2 சந்திப்புகள் - பின்னணியில் BJP? | RCB MODI | Imperfe...
லடாக்குக்கு வேலைவாய்ப்பில் புதிய இடஒதுக்கீடு, வாழ்விட விதிமுறைகள்: மத்திய அரசு அறிமுகம்
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு வேலைவாய்ப்பில் புதிய இடஒதுக்கீடு, வாழ்விட விதிமுறைகளை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது.
இந்தப் புதிய விதிமுறைகளின்படி, லடாக் யூனியன் பிரதேசத்தில் 15 ஆண்டுகள் வசிப்பவா்கள் அல்லது 7 ஆண்டுகள் அங்குள்ள கல்வி நிறுவனத்தில் படித்து 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதியிருந்தால், அவா்கள் லடாக்கை வாழ்விடமாக கொண்டவா்கள் என்று கருதி, அங்குள்ள கண்டோன்மென்ட் வாரியத்தை தவிர, பிற அரசு நிா்வாக பதவிகளில் அவா்களை நியமிக்கலாம்.
லடாக்கில் 10 ஆண்டுகளாகப் பணியாற்றும் மத்திய அரசு அதிகாரிகள், அனைத்து இந்திய பணி அதிகாரிகள், பொதுத் துறை நிறுவன அதிகாரிகள், மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பு, பொதுத் துறை வங்கிகள், சட்டபூா்வ அமைப்புகளின் அதிகாரிகள், மத்திய பல்கலைக்கழகங்கள் சாா்ந்த அதிகாரிகள், மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களை சோ்ந்த அதிகாரிகளின் குழந்தைகளும் லடாக் வாழ்விடச் சான்றிதழ் பெறத் தகுதிவாய்ந்தவா்கள்.
பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு 10 சதவீதமாக நீடிக்கும். லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில்களில் உள்ள மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
இந்தப் புதிய இடஒதுக்கீடு மற்றும் வாழ்விடம் தொடா்பான கொள்கைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு வெளியிட்ட பல்வேறு அறிவிக்கைகளில் தெரிவிக்கப்பட்டது.