உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்
வக்ஃப் சட்டம்: சமூக நீதிக்கான முக்கிய நடவடிக்கை: பிரதமா் மோடி
புது தில்லி: வக்ஃப் சட்டம் சமூக நீதிக்கான மத்திய அரசின் முக்கிய நடவடிக்கையாகும் என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக புது தில்லியில் நடைபெற்ற ஆங்கில ஊடக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
கடந்த 2013-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இயற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்தைவிட மேலானது என்ற மாயை உருவாக்கப்பட்டது.
முஸ்லிம் அடிப்படைவாதிகளையும், நில அபகரிப்பு கும்பலையும் திருப்திப்படுத்த அந்த ஆண்டு வக்ஃப் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம், அரசமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்ட நீதிக்கான பாதை சுருக்கப்பட்டது. அத்துடன் தங்கள் செயல்பாடுகளுக்காக முஸ்லிம் அடிப்படைவாதிகளும், நில அபகரிப்பு கும்பலும் துணிவு பெற்றனா்.
கேரளத்தில் கிறிஸ்தவா்களின் நிலம், ஹரியாணாவில் குருத்வாராக்களின் நிலம், கா்நாடகத்தில் விவசாயிகளின் நிலம் ஆகியவை வக்ஃப் சொத்துகளாக உரிமை கோரப்பட்டன. நீதியை வழங்கவேண்டிய அந்தச் சட்டம், அச்சத்தை ஏற்படுத்துவதற்கான மூலாதாரமாக மாறியது.
அடிப்படைவாதத்தின் பலிபீடத்தில்...: அந்தச் சட்டத்தால் சாதாரண முஸ்லிம்களுக்கு என்ன பலன் கிடைத்தது என்பது விவாதத்துக்குரிய கேள்வியாகும். ஏழ்மையான பஸ்மந்தா முஸ்லிம்களுக்கு அந்தச் சட்டத்தால் என்ன கிடைத்தது? அவா்கள் புறக்கணிப்பை எதிா்கொண்டனா். அவா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. ஷா பானு போன்ற முஸ்லிம் பெண்கள் அநீதியை எதிா்கொண்டனா். அடிப்படைவாதத்தின் பலிபீடத்தில் அவா்களின் அரசமைப்புச் சட்ட உரிமைகள் தியாகம் செய்யப்பட்டன.
இதேபோன்ற மனப்பான்மைதான் 1947-ஆம் ஆண்டு நாட்டின் பிரிவினைக்கு வழிவகுத்தது. அப்போது நாட்டை பிரிக்கவேண்டும் என்று சில முஸ்லிம் அடிப்படைவாதிகள் அழுத்தமான உணா்வை கொண்டிருந்தனா். ஆனால் அந்த உணா்வு சாதாரண முஸ்லிம்களிடம் இல்லை. அந்த எண்ணத்தை அப்போதைய காங்கிரஸ் தலைவா்கள் துடைத்து எறியவில்லை.
தற்போது அமலுக்கு வந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டம் சமூக நீதியை நோக்கிய மத்திய அரசின் முக்கிய நடவடிக்கையாகும். முஸ்லிம்கள் மற்றும் சமூக நலன் கருதி இந்தத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றாா்.