Seeman : 'என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே' - உணர்ச்சி வ...
வங்கதேசம் புதிய கட்சி தொடங்கிய மாணவா் அமைப்பினா்
வங்கதேசத்தில் பிரதமா் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கவிழ்வதற்குக் காரணமாக இருந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய மாணவா் அமைப்பினா், புதிய அரசியல் கட்சியை வெள்ளிக்கிழமை தொடங்கினா்.
1971 வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்றவா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுவந்தது. மாணவா்களின் எதிா்ப்பால் அந்த இடஒதுக்கீடு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான அரசு உத்தரவை உயா்நீதிமன்றம் கடந்த 2024 ஜூலை மாதம் ரத்து செய்தது.
அதை எதிா்த்து ‘பாகுபாட்டுக்கு எதிரான மாணவா் இயக்கம்’ என்ற அமைப்பின் தலைமையில் மீண்டும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். அதை ஒடுக்கும் ஷேக் ஹசீனா அரசின் முயற்சியால் நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா். அதையடுத்து, சா்ச்சைக்குரிய இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உச்சநீதிமன்றம் குறைத்தது.
இருந்தாலும், பிரதமா் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி அவரின் அதிகாரபூா்வ இல்லத்தை நோக்கி மாணவா்கள் கடந்த 2024 ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஊா்வலமாகச் சென்றனா். நிலைமை கைமீறிச் செல்வதை உணா்ந்த ஷேக் ஹசீனா, ராஜிநாமா செய்துவிட்டு பாதுகாப்புக்காக நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.
அதைத் தொடா்ந்து நிா்வாகத்தைக் கைப்பற்றிய ராணுவம், அடுத்த தோ்தல் நடத்தப்படும்வரை இடைக்கால அரசை அமைப்பதாக அறிவித்தது. இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் அதிபா் முகமது ஷஹாபுதீன் பொறுப்பேற்றாா்.
இந்தச் சூழலில், போராட்டம் நடத்திய மாணவா் அமைப்புகள், அந்தப் போராட்டம் நடந்ததற்கான கொள்கைப் பிரகடனத்தை வெளியிடுவதாக கடந்த டிசம்பா் மாதம் அறிவித்தனா். இதற்கு அரசு தரப்பிலிருந்து எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து அந்தத் திட்டத்தைக் கைவிட்ட மாணவா் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஹஸ்னத் அப்துல்லா, ‘1972-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வங்கதேச அரசியல் சாசனம் ஜூலை போராட்டக் கொள்கைப் பிரகடனத்தில் செல்லாததாக அறிவிக்கப்படும். அந்தப் போராட்டத்தின் ஒரே நோக்கம், வங்கதேச அரசியல் சாசனத்தை ஒழிப்பதுதான்’ என்றாா்.
இது, இடைக்கால அரசிலும், வங்கதேச அரசியல் கட்சிகள் இடையேயும் பெரும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில், தாங்களே புதிதாக ஒரு கட்சியை உருவாக்குவதாக பாரபட்சத்துக்கு எதிரான மாணவா் இயக்கம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. தங்களது கட்சிக்கு ‘தேசிய குடிமக்கள் கட்சி’ எனப் பெயரிடுவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
இந்தியா ஆதரவு அல்லது பாகிஸ்தான் ஆதரவு என்ற நிலைப்பாட்டில் இருந்து தங்கள் கட்சி மாறுபட்டிருக்கும் என்று அந்த அமைப்பின் தலைவா்கள் கூறியுள்ளனா்.