Vikatan Digital Awards: " 'அமைதிப்படை' ஓ.பி.எஸ், 'தில்லாலங்கடி' உதயநிதி" - ஜெயக்...
வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஏன்? விஜய் அடுக்கடுக்கான கேள்வி!
நீட் ரத்து, கல்விக் கடன் ரத்து, பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் ஏன் நிறைவேற்றவில்லை என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
தவெக தலைவா் விஜய்யின் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்புப் பயணம் திருச்சியிலிருந்து தொடங்கியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து தொண்டர்களின் வெள்ளத்தில் மிதந்து சுமார் 5 மணிநேர பயணத்துக்கு பிறகு மரக்கடை பகுதிக்கு விஜய் வந்தடைந்தார்.
மரக்கடை பகுதியில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில் விஜய் உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
”அரசர்கள் போருக்குச் செல்வதற்கு முன் குலதெய்வத்தை வணங்குவது போன்று, அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஜனநாயகப் போருக்கு முன்னதாக உங்களைச் சந்திக்க வந்துள்ளேன்.
திருச்சியில் தொடங்கினால் திருப்புமுனையாக அமையும். அண்ணா முதலில் தேர்தலில் நின்றது திருச்சியில்தான், எம்ஜிஆர் முதல் மாநாடும் இங்குதான் நடத்தினார். கொள்கை தலைவர் பெரியார் வாழ்ந்த கொள்கை உள்ள மண் இது.
நீட் தேர்வையும் மாணவர்களின் கல்விக் கடனையும் ரத்து செய்வோம் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுனீர்களா? மக்கள் நலப் பணியாளர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுனீர்களா? பழைய ஓய்வுத்திட்டத்தை நிறைவேற்றாதது ஏன்?
இலவச பேருந்து திட்டத்தை அறிவித்துவிட்டு ஓசி என மக்களை அவமானப்படுத்துகிறார்கள். மகளிர் உதவித் தொகை அனைவருக்கும் கிடைக்கவில்லை.
கல்வி, மருத்துவம், அடிப்படை சாலை வசதிகள், பெண்கள் பாதுகாப்பு போன்று செய்ய முடிவதை மட்டுமே நாங்கள் வாக்குறுதியாக அளிப்போம். இவற்றில் சமரசம் செய்ய மாட்டோம்” எனத் தெரிவித்தார்.
விஜய் பேசத் தொடங்கியதும் அவரது மைக்கில் பிரச்னை ஏற்பட்டதால், அவர் பேசியது யாருக்கும் கேட்கவில்லை.
பெரும் எதிர்பார்ப்புடன் காலை முதல் காத்திருந்த தொண்டர்கள் விஜய் பேசியது எதுவும் கேட்காததால் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.