வாழும் கைவினைப் பொக்கிஷம் விருது: 9 கைவினைஞர்களுக்கு முதல்வர் வழங்கல்!
வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளை 9 சிறந்த கைவினைஞர்களுக்கும், பூம்புகார் மாநில விருதுகளை 9 சிறந்த கைவினைஞர்களுக்கும் முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.
முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று (18.2.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், கைவினைத் தொழிலுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 65 வயதுக்கும் மேற்பட்ட
9 சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளையும், கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகள் ஆகியவற்றில் சிறந்த 9 கைவினைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளையும் வழங்கி சிறப்பித்தார்.
வாழும் கைவினைப் பொக்கிஷம் விருது
கைவினைத் தொழிலுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட சிறந்த கைவினைஞர்களுக்கு தமிழ்நாடு அரசால் ”வாழும் கைவினைப் பொக்கிஷம்” எனும் விருது வழங்கப்படுகிறது.
கைவினைஞர்களை பாராட்டுவதற்கும், அவர்களின் திறனை ஊக்குவிப்பதற்கும் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தால் இவ்விருது ஆண்டுதோறும் ரூ. 15 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது. வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதிற்காக ஒவ்வொரு பிரிவிற்கும் ஒருவர் வீதம் தலா 8 கிராம் தங்கப்பதக்கம், தாமிரப்பத்திரம், சான்றிதழுடன் ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்படுகிறது.
அதன்படி, 2023-24ஆம் ஆண்டிற்கான ”வாழும் கைவினைப் பொக்கிஷம்” விருதுகளை – தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த
சி.முருகேசன் (தஞ்சாவூர் கலைத்தட்டு), ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சொ. ராஜகோபால் (பஞ்சலோக சிற்பம்), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. ரெ. ராதா (நெட்டி வேலை), விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சி.பலராமன் (சுடுகளிமண் சிற்பம்), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சொ. நாகமுத்து ஆச்சாரி (மரச்சிற்பம்), மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ச. கிருஷ்ணமூர்த்தி (தகட்டு வேலை), திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹம்சா பீவி (பனை ஓலை பொருள்கள்), மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெ.கிருஷ்ணன் (பஞ்சலோக சிலைகள்) மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த செ. லில்லி மேரி (மூங்கில் பாயில் ஓவியம்) ஆகிய 9 விருதாளர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின், வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதிற்கான தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, 8 கிராம் தங்கப்பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் தகுதிச்சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.
இதையும் படிக்க: காஞ்சிபுரத்தில் புத்த பிக்குகள் பேரணி!
பூம்புகார் மாநில விருது
“பூம்புகார் மாநில விருது” தமிழ்நாட்டின் சிறந்த கைவினைஞர்களின் கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகளை கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக பத்து கைவினைஞர்களுக்கு ஆண்டுதோறும் ரூ. 12 லட்சம் மதிப்பில் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுகள் ரூ.50,000/- பரிசுத் தொகை, 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப்பத்திரம் மற்றும் தகுதிச்சான்றிதழும் கொண்டதாகும்.
அதன்படி, 2023-24-ஆம் ஆண்டிற்கான பூம்புகார் மாநில விருதுகளை – சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த
சீ.வே. ராமகிருஷ்ணன் (உலோக சிற்பம்) மற்றும்
கோ. குணசுந்தரி (காகிதக் கூழ் பொம்மைகள்),
சி. காத்தான் (தஞ்சாவூர் ஓவியம்) மற்றும் ரெ. மெய்யர் (சுடு களிமண் சிற்பம்), செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கு. ரமேஷ் (மரச்சிற்பம்) மற்றும் ஹ. ஸ்ரீதர் (தேங்காய் ஓடு பொருட்கள்), திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கா. கார்த்திகேயன் (பனை ஓலை பொருட்கள்), கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பா. கல்யாணகுமார் (காகித கூழ் பொம்மைகள்), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கி. சந்திரசேகரன் (கண்ணாடி கலைப்பொருள்கள்) ஆகிய 9 விருதாளர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் பூம்புகார் மாநில விருதிற்கான தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.