விஜய் கூறுவதை மக்கள் ஏற்க மாட்டாா்கள்: அமைச்சா் அன்பில் மகேஷ்
``விஜய் இப்போது தானே முதல் சுற்று வந்துள்ளார், அடுத்த சுற்றில் பார்ப்போம்'' - அமைச்சர் KKSSR
விருதுநகரில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தமிழக முதல்வர் முன்னெடுத்துள்ள ஓரணியில் தமிழ்நாடு என்ற தி.மு.க-வின் முன்னெடுப்பில் 1 கோடி குடும்பங்களுக்கு மேலானோர் இணைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 68 ஆயிரம் வாக்குச் சாவடிகளிலும் வாக்குச் சாவடி முகவர்கள் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று மக்களை ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் இணைக்கும்போது, அரசின் திட்டங்கள், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கிறோம்.

மத்திய அரசு நமது மொழி, இனத்தை அழிக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதை எதிர்த்து மக்களை ஒன்றிணைக்கும் எண்ணத்தோடு `ஓரணியில் தமிழ்நாடு' என்று மக்களை முதல்வர் இணைத்து வருகிறார்.
நாளை அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும், பொதுமக்களோடு இணைந்து நடத்த உள்ளோம்.
மண், மொழி, இனம் காக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்று கூறி மக்களோடு இணைந்து உறுதிமொழி ஏற்க உள்ளோம்.
விருதுநகர் மாவட்டத்தில் ஓரணியில், தமிழ்நாடு திட்டத்தில் 4.19 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இன்னும் பலர் இணைந்துகொண்டிருக்கிறார்கள்.
மக்கள் நாங்கள் செல்லும் இடங்களில் அரசை விமர்சனம் செய்யவில்லை, திட்டங்களை விமர்சனம் செய்யவில்லை; மக்கள் முதல்வரோடு இருக்கிறார்கள். முதல்வர் மக்களோடு இருக்கிறார். நாங்கள் மக்களோடு இணைந்து செயல்பட்டு வருகிறோம்.
மேலும், 20 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் பொதுக் கூட்டமும், கரூரில் 30 ஆம் தேதி முப்பெரும் விழாவும் நடைபெற உள்ளது.

ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில் அதிகமாக மகளிர் உரிமைத் தொகை குறித்த மனுக்கள் வருகின்றன. இதை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
முதல்வரைப் பொறுத்தவரை, தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார். தற்போது வரை ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு தொகை வழங்கப்பட்டுள்ளது.
விஜய் பிரசாரத்திற்கு மக்கள் கூட்டம்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமலேயே தொகையை வழங்கிவிட்டதாக த.வெ.க தலைவர் விஜய் விமர்சனத்திற்கு பதிலளித்தார். எதிர்க்கட்சியினர் ஆளுங்கட்சியைப் பாராட்டிவிட்டால், அவர்களுக்கு வேலையே இருக்காது எனவும் தெரிவித்தார்.

தி.மு.க அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று சொல்லிவிட்டால், அவர்களுக்கு வேலையே இருக்காது. ஒவ்வொரு திட்டத்தையும் முதல்வர் யோசித்து, யோசித்து மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார்.
தி.மு.க அரசை விட எந்த அரசும் சிறப்பாக நடத்த முடியாது. சொல்ல முடியாத அளவிற்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
விஜய் பிரசாரத்திற்கு மக்கள் கூடும் கூட்டம் குறித்த கேள்விக்கு, விஜய், "இப்போது தானே முதல் சுற்று வந்துள்ளார். அடுத்த சுற்றில் பார்ப்போம்" என்று பதிலளித்தார்.
மேலும், காவல்துறையும் அரசாங்கமும் யாருடைய பிரச்சாரத்திலும் தடங்கல் ஏற்படுத்துவதில்லை. யாருடைய பிரச்சாரத்தையும் தடுத்து நிறுத்தி முதல்வர் அரசியல் செய்வதில்லை.