விற்கப்படுகிறதா ஆர்சிபி..? ரூ.16,800 கோடிக்கு கைமாற்ற திட்டமிடும் உரிமையாளர்கள்?!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் உரிமையை அதன் உரிமையாளர்கள் விற்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 3 ஆம் தேதி நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி பெங்களூரு அணி முதல் முறையாக 18 ஆண்டுகளுக்குப் பின்னர் சாம்பியன் பட்டத்தை வென்றது.
முதல் முறை கோப்பையை வென்ற உற்சாகத்தில் கர்நாடக விதான் சௌதாவிலிருந்து பெங்களூரு சின்னசாமி திடல் வரை வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி ஒன்றுமரியாத அப்பாவி மக்கள் (அதுவும் 30 வயதுக்குள்பட்ட) 11 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில், தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள், அணி நிர்வாகத்தினர், மேலாளர் உள்ளிட்டோர் மீது சட்டரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சின்னசாமி திடலை மாற்றுவதற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஆர்சிபி அணியின் உரிமையை வேறொருவருக்கு அணி உரிமையாளர்கள் விற்க விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அணி உரிமையின் மதிப்பீடு விவரம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை. இருந்தாலும், உரிமையாளர்கள் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக ரூ.16,834 கோடி) வரை விலை கேட்கக்கூடும் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. டியாஜியோ பிஎல்சி மூலம் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் ஆர்சிபி அணி வழிநடத்தப்பட்டு வருகிறது.
பிரிட்டிஷ் டிஸ்டில்லர், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் ஆகிவற்றின் தலைமை நிறுவனமான டியாஜியோ பிஎல்சி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் பகுதி அல்லது முழு பங்குகளை விற்பனை செய்ய முன்வந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆர்சிபி அணி விற்பனைக்கு செய்தி வெளியானதும், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் அணியின் பங்குகள் விலை உயர்ந்தன. இன்று (ஜூன் 10) காலை பங்குகள் விலை 3.3 சதவிகிதம் வரை உயர்ந்தன.
ஆர்சிபியை டியோஜியோ கைப்பற்றியது எப்படி?
2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்ட போது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸின் உரிமையாளராகவும், இந்தியாவின் மதுபானத் துறையில் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவராகவும் இருந்த விஜய் மல்லையாவால் ஆர்சிபி அணி முதலில் வாங்கப்பட்டது.
அவர் தனது மதுபானங்களை பிரபலபடுத்துவதற்காக மட்டுமே இந்த அணியை வாங்கியதாக சமீபத்திய நேர்காணலில் தெரிவித்திருந்தார். மல்லையா கடனில் சிக்கிக் கொண்டதால், டியாஜியோவிற்கு, யுனைடெட் ஸ்பிரிட்ஸ் மூலம் ஆர்சிபியை வாங்க வாய்ப்பு கிடைத்ததும் நினைவுகூரத்தக்கது.
இந்தியாவிலேயே அதிகளவிலான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள முதன்மை அணியான ஆர்சிபியின் நிலையைக் கண்டு, அந்த அணியின் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கவலை தெரிவித்து வருகின்றன.