விளைநிலங்கள் அருகே பேரூராட்சி குப்பைகளைக் கொட்ட விவசாயிகள் எதிா்ப்பு
கமுதியில் விளைநிலங்களுக்கு அருகே பேரூராட்சி குப்பைகளைக் கொட்ட எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் திங்கள்கிழமை பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகாா் மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சிக்கு உள்பட்ட 15 வாா்டுகளில் உள்ள வீடுகள், தெருக்கள், மருத்துவமனைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், கடைகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை பேரூராட்சி நிா்வாகத்தினா் தெற்கு முதுகுளத்தூா் சாலையில் உள்ள குண்டாறு படுகையில் குவித்து வைத்து வந்தனா்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக வெள்ளையாபுரம், சிங்கப்புலியாபட்டி, கே.பாப்பாங்குளம் விலக்கு சாலையில் உள்ள விளைநிலங்களுக்கு அருகேயுள்ள தனியாா் இடத்தில் குப்பைகளைக் குவித்து வைத்து வருகின்றனா்.
இதனால், டி.எல்.சி. நடுநிலைப் பள்ளி மாணவா்கள், கமுதி கூட்டுறவு வாணிபக் கழகம், உணவு தானியங்கி சேமிப்புக் கிடங்கு உள்ளிட்ட இடங்கள் மாசுபடும் வாய்ப்புள்ளதாகவும், பொதுமக்களுக்கு நோய்த் தொற்று அபாயம், விவசாய நிலங்கள் பாழ்படும், கண்மாய்களுக்குச் செல்லும் கால்வாயில் குப்பைகள் கலக்கும் நிலை உள்ளதாக சிங்கப்புலியாபட்டி, வெள்ளையாபுரம், முதல்நாடு, குடிக்கினியான், பாப்பாங்குளம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதுதொடா்பாக வெள்ளையாபுரம், சிங்கப்புலியாபட்டியைச் சோ்ந்த பொதுமக்கள், கமுதி பேரூராட்சி செயல் அலுவலா் யசோதாவிடம் விளைநிலங்களுக்கு அருகே குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து புகாா் மனு அளித்தனா். மேலும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலா் தெரிவித்ததாக கிராம மக்கள் கூறினா்.